உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பட்டாசு ஆலையில் விபத்து; மேலாளர் உடல் கருகி பலி

பட்டாசு ஆலையில் விபத்து; மேலாளர் உடல் கருகி பலி

துாத்துக்குடி; பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் மேலாளர் உடல் கருகி உயிரிழந்தார். துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலுகா, கருப்பூர் கிராம காட்டு பகுதியில் சிவகாசியை சேர்ந்த கண்ணபிரானுக்கு சொந்தமான ஜாஸ்மின் பட்டாசு ஆலை உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். உயர்தர பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி நெருங்குவதால் பட்டாசு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நேற்று அனைத்து தொழி லாளர்களும் 16 அறைகளில் பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென மாலை, 3:00 மணியளவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் சிதறி ஓடினர். ஆலை மேலாளரான சிவகாசி விருஷநத்தம் கந்தசாமி, 55, தொழிலாளர்களை வெளி யேறும்படி கூச்சலிட்டபடி அருகே இருந்த கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பட்டாசு ஆலையில் நான்கு பெரிய கட்டடங்களும், கோழிப்பண்ணையும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. தப்பிக்க முயன்ற கந்தசாமி, இரும்பு கம்பி வேலிகளில் சிக்கியதால் உடல் கருகி உயிரிழந்தார். கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்துார் பகுதி தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. எட்டையபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !