உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பள்ளி முன் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளூர் மாணவர்களிடம் விசாரணை

பள்ளி முன் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளூர் மாணவர்களிடம் விசாரணை

துாத்துக்குடி: அரசு பள்ளி முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக மூன்று உள்ளூர் மாணவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர். துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, சவலாப்பேரி பகுதி அரசு பள்ளி மாணவர்களிடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, சவலாப்பேரி அரசு பள்ளி முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வல்லநாடு பகுதி மாணவர்கள் அந்த குண்டுகளை வீசியதாக தகவல் பரவியது. புளியம்பட்டி போலீசார் விசாரித்தனர். ஒரு பைக்கில் சென்று பள்ளி முன் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக சவலாப்பேரியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் ஆகாஷ், சுரேந்தர், மற்றும் இளம் சிறார் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறியதாவது: த னியார் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கின்போது, வல்லநாடு, சவலாப்பேரி பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டனர். மறுநாள் கருத்தரங்கில் சவலாப்பேரி மாணவர்கள் பங்கேற்கவில்லை. அவர்களை தேடி வல்லநாடு மாணவர்கள் சிலர், சவலாப்பேரிக்கு சென்றுள்ளனர். உள்ளூரை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் உட்பட மூவர் அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். வல்லநாடு பள்ளி மாணவர்களை போலீசில் சிக்க வைக்கும் நோக்கில், மூவரும் சேர்ந்து சவலாப்பேரி அரசு பள்ளியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இரண்டு பெட்ரோல் குண்டுகளை சிலர் வீசி சென்றுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் மூவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி