ரோட்டில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
துாத்துக்குடி:நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு, நேற்று லாரி ஒன்று கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. சம்பாகுளத்தை சேர்ந்த சுப்பிரமணியன், 45, என்பவர் லாரியை ஓட்டினார். தளவாய்புரம் அடுத்துள்ள ஆசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென திரும்பியது. இதனால், அந்த லாரி மீது இந்த லாரி மோதாமல் இருக்க, சுப்பிரமணியன் பிரேக் பிடித்ததால், நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த எம்.சாண்ட் மண் சாலையில் கொட்டியது. டிரைவர் சுப்பிரமணியன் காயமடைந்தார். கயத்தாறு போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரித்து வருகின்றனர்.