காலை உணவுக்கு பதில் பிஸ்கட் பணியாளர்கள் மூவர் டிஸ்மிஸ்
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஒன்றியத் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவுக்கு பதிலாக பிஸ்கட் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் செல்வி, நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். புதிய மாணவர் சேர்க்கைக்கு பின், உணவு பொருட்களுக்கான திருத்தப்பட்ட தேவை குறிப்பை சுயஉதவிக் குழுவினர் சரியாக சமர்ப்பிக்காததால், காலை உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். விசாரணைக்குப்பின், மகளிர் சுயஉதவிக் குழுவை சேர்ந்த, காலை உணவு திட்ட கணக்காளர், சமையலர் மற்றும் உதவியாளர் ஆகியோரை பணியில் இருந்து நீக்க, அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதன்படி மூவரும், மகளிர் சுயஉதவிக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், உரிய விளக்கம் அளிக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியைக்கு குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.