குறைந்த தண்ணீரில் பப்பாளி சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
உடுமலை : குறைந்த தண்ணீர் மற்றும் தொழிலாளர் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால், பப்பாளி சாகுபடி செய்ய உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.உடுமலை பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, சொட்டு நீர் பாசனம் அமைத்து, பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்கின்றனர். இதில், புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, பப்பாளி, சாகுபடியிலும் இப்பகுதி விவசாயிகள் அசத்தி வருகின்றனர்.இதில், உண்பதற்கான காய்கள் உற்பத்தியோடு, பப்பாளி பாலும் எடுத்து விற்பனை செய்கின்றனர். இவ்வகை பால், பேக்கரி பொருட்கள் தயாரிப்பில், அதிகம் பயன்படுத்தப்படுகிறது.இச்சாகுபடிக்கு, கோவை வேளாண் பல்கலை., சார்பில், பல்வேறு ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பலவகைப்பட்ட மண்ணிலும், குறைந்த தண்ணீரில், பப்பாளி வளரக் கூடியதாகும்.குறைந்த தண்ணீர் மற்றும் தொழிலாளர் தேவை குறைவு போன்ற காரணங்களால் பப்பாளி சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.பப்பாளியை நேரடியாகவும், பழங்கள் விற்பனை நிலையங்களிலும் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். பப்பாளி பாலை, சம்மந்தப்பட்ட வியாபாரிகளே நேரடியாக விளைநிலங்களில் வந்து எடுத்து கொள்கின்றனர்.இதனால், சில இடங்களில், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மாவுப்பூச்சி தாக்குதலால், உடுமலை பகுதியில், பப்பாளி சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இத்தகைய நோய்த்தாக்குதல் குறித்து கவனமாக இருந்தால், சாகுபடியில் நஷ்டம் வராது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.