தீவனப்புல் வளர்ப்புக்கான மானியங்கள் வழங்க கோரிக்கை
உடுமலை : உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்தி மற்றும் இதர தேவைகளுக்காக, 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாடு மற்றும் எருமைகள் வளர்க்கப்படுகின்றன.இதே போல், இறைச்சிக்காகவும், ஆடுகள் வளர்ப்பது அதிகரித்துள்ளது. கால்நடைத்துறை சார்பில், பல்வேறு மானியத்திட்டங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கால்நடை வளத்தை அதிகரிக்கவும், முன்பு வழங்கப்பட்டு வந்தது. இதற்கான பயனாளிகள், கால்நடைத்துறையின், மருந்தகம், கிளை நிலையங்கள் வாயிலாக, தேர்வு செய்யப்பட்டனர்.தீவனப்புல் வளர்ப்பு திட்டத்தில், சோளம், அசோலா, ஊறுகாய்புல் சாகுபடிக்கும், தேவையான இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டது. விளைநிலங்களில், மழை நீர் தெளிப்பான் அமைக்கவும், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மானியம் வினியோகித்தனர். கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய மானியத்திட்டத்துக்கு, கால்நடைத்துறையில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.கால்நடை வளர்ப்போர் கூறுகையில், 'தீவனப்புல் வளர்ப்பிற்கு பருவமழை அவசியமானதாகும். வடகிழக்கு பருவமழைக்கு முன், விதைகளை வழங்கினால் மட்டுமே தீவன வகைகளை விளைநிலத்தில் வளர்க்க முடியும். பசுந்தீவனங்களுக்கான மானியங்களை மீண்டும் மானியத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,' என்றனர்.