தெருநாய்களால் பலியாகும் ஆடுகள்; சந்தை மதிப்பில் இழப்பீடு தேவை
திருப்பூர்; 'தெருநாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்,' என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட இடங்களில் ஆடு, கோழி, கன்று உள்ளிட்டவற்றை தெருநாய்கள் கடிப்பது, தினசரி நிகழ்வாக மாறி வருகிறது. இதனால், நுாற்றுக்கணக்கான கால்நடைகள் இறக்கின்றன. குறிப்பாக, செம்மறியாடு மற்றும் வெள்ளாடு இறப்பு என்பது, அதிகரித்து வருகிறது.'இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.ஆடுகளே அதிகம் பலியாகும் நிலையில், 'ஒரு ஆட்டின் சந்தை மதிப்பு, 12 முதல், 13 ஆயிரம் ரூபாய்' என்கின்றனர் விவசாயிகள். இந்நிலையில், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்பில் இறக்கும் ஆடுகளுக்கு, இழப்பீடாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதே தொகையை, தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடுகளுக்கும் வழங்க, கால்நடை பராமரிப்புத்துறைக்கு, தமிழக அரசு பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது; தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.ஆனால், 'தெருநாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளுக்கு, சந்தை மதிப்பிலான தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும்' என, விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆடுகள் பலி தொடர்கிறது
தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது தொடர்கிறது. வெள்ளகோவில் அடுத்த சேனாபதிபாளையம், வேப்பங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 50. விவசாயி மற்றும் கால்நடை வளர்ப்பாளர். நேற்றுமுன்தினம் இரவு தோட்டத்தில் உள்ள பட்டியில் அவரது ஆடுகளை அடைத்து வைத்துச் சென்றார். நேற்று அதிகாலை ஆடுகளின் சப்தம் கேட்டுச் சென்று பார்த்த போது, பட்டிக்குள் புகுந்த நாய்கள் கடித்து இரு ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மேலும் இரு ஆடுகள் காயமடைந்து காணப்பட்டது. காயமான ஆடுகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து வி.ஏ.ஓ., மற்றும் கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.