வனத்துக்குள் திருப்பூர் திட்டம் ஜன. 3ல் 11வது ஆண்டு விழா
திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின், 11வது ஆண்டு விழா, வரும், ஜன. 3ம் தேதி மங்கலம் மாதேசிலிங்கம் கோவில் நிலத்தில் நடைபெற உள்ளது. வெற்றி அறக்கட்டளை சார்பில், பல்வேறு பசுமை அமைப்புகளுடன் இணைந்து, 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 2015 முதல், மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டம் வேகமாக வெற்றியடைந்து வருகிறது. கடந்த, 11 ஆண்டுகளில், 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது; அதில், பெரும்பாலான கன்றுகள், வானுயர்ந்த மரங்களாக வளர்ந்துள்ளன. நடப்பு ஆண்டில் துவங்கப்பட்ட, 11வது திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த வாரமே, இலக்கை எட்டிப்பிடித்து மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளனர். இந்நிலையில், 'வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின், 11வது ஆண்டு விழா, மங்கலம் மாதேசிலிங்கம் கோவில் நிலத்தில் நடக்க உள்ளது. மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கோவில் நிலத்தில், வரும் ஜன. 3ம் தேதி காலை, 8:00 முதல், 10:00 மணி வரை விழா நடக்கிறது; 10 ஏக்கர் கோவில் நிலத்தில் மரக்கன்று நடும் பணி துவக்கி வைக்கப்படும். விழாவில், தமிழக அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சிவராமன், ஓய்வு பெற்ற கால்நடை பல்கலைக்கழக முனைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகிக்கின்றனர். ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், துணை கமிஷனர் ஹர்சினி, உதவி கமிஷனர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். --- 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் சார்பில் நடப்பட்டுள்ள மரங்கள் செழித்து வளர்ந்து, தெக்கலுார் பகுதியைப் பசுமையாக்கியுள்ளது. 25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு அபார சாதனை கடந்த, 11 ஆண்டுகளில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன; நடப்பு ஆண்டில் துவங்கப்பட்ட, 11வது திட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் இலக்கு, கடந்த வாரமே எட்டப்பட்டது.