4 உண்மைத்தன்மையை உணரும் பக்குவம் தேவை
''சமூக ஊடகங்கள், ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் துாண்களாக மாறியிருப்பினும், அதில் வரும் தகவல்களின் உண்மை தன்மையை உணரும் பக்குவம் வர வேண்டும்'' என்கிறார், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடந்த முத்தமிழ் விழாவில் பங்கேற்ற அவர் நம்மிடம் பகிர்ந்தவை:கற்காலம் துவங்கி பல்வேறு காலகட்டங்களை கடந்து வந்திருக்கிறோம். இக்காலத்து மனிதர்களும் தங்களின் அனுபவம், சொல், செயல், சிந்தனை, கோபம், விமர்சனங்களை சக மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் நிறைந்தவர்களாகவே உள்ளனர். இவற்றையெல்லாம் வெளிப்படுத்த கலை, இலக்கியமும் உகந்த வழியாக இருக்கிறது.சமூக ஊடகங்களை எதிர்மறையாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆங்காங்கே நடக்கும் முறைகேடுகள், சீர்கேடுகள் சமூக ஊடகம் வாயிலாக, அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படுகிறது; அதிகாரிகளின் கவனம் ஈர்க்கப்படுகிறது. அதே நேரம், சமூக ஊடகங்களில் வரும் அனைத்தும் உண்மை அல்ல; இட்டுக்கட்டி, போலித்தன்மையுடன் கூடிய தகவல்கள், சக மனிதர்கள் மீதான வெறுப்பை விதைக்கும் விஷயங்கள் மற்றும் வணிக ரீதியான மோசடி விளம்பரங்கள் என பலவும் வரத்தான் செய்கின்றன. இவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்து, நம்பகத்தன்மையை மட்டும் உறுதிப்படுத்தும் பயிற்சியை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெற்றாக வேண்டும். அதே நேரம், சமூக ஊடகங்களில் பெருமளவு நேரத்தை செலவிடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர் தனித்திறமைகள்
வளர்க்க முக்கியத்துவம்கல்வி வளாகம் என்பது, பாட திட்டம் மற்றும் மனப்பாடம் சார்ந்த, மாணவர்கள் மத்தியில் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தும் இடமாக மாறிப் போயிருக்கிறது. மாணவர்கள், ஒருவித மன அழுத்தத்தில் உள்ளனர். மாணவர்களை தயார்படுத்த, ஆசிரியர்களும் ஓயாமல் உழைக்கின்றனர். கல்விப்பணியுடன் பிற பணிகளும் அவர்களுக்கு வழங்கப்படுவதால், பணிச்சுமை அதிகம்; மாணவர்கள், மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாற்றப்படுகின்றனர். கல்விக்கூடங்களில் கலை, இலக்கியம் சார்ந்து, மாணவர்கள், தங்கள் திறமையை நிரூபிக்கும் சூழல் இல்லை. விளையாட்டு, ஓவியம் உள்ளிட்டவற்கு ஒதுக்கப்படும் நேரம் கூட, மற்ற பாடங்களுக்கென பறிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலை மாற வேண்டும். பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் திறமையை வெளிக்காட்டும் நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும், அது இன்னும் வலிமை பெற வேண்டும்; பாடத்திட்டத்துக்கு இணையான முக்கியத்துவம், தனிப்பட்ட திறமைகளை வளர்த்தெடுக்கவும் வழங்க வேண்டும்.- ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்.