மேலும் செய்திகள்
கள் இறக்க அனுமதி கோரி மனு
05-Feb-2025
உடுமலை, : தென்னையிலிருந்து 'கள்' இறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டி, மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் வகையில், உடுமலை பகுதி கிராமங்களில், விவசாயிகள் சார்பில், திண்ணை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில், மொத்தமாக, 4.42 லட்சம் ெஹக்டேர் பரப்பளவில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள தென்னை சாகுபடியில், நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வாக, தென்னை மரங்களில் 'கள்' இறக்க அனுமதிக்க வலியுறுத்தி, கடந்த, 2009ல், இருந்து கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தென்னை, பனை மரங்களில் இருந்து 'கள்' இறக்க அனுமதிக்க வேண்டியும், கள்ளை உணவு பட்டியலில், சேர்க்க வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதற்காக, திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், தமிழ்நாடு கள் இயக்கம், இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளை நேரடியாக சந்தித்து திண்ணைக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் 'நீரா' பெரியசாமி கூறியதாவது: தென்னை, பனை மரங்களில், 'கள்' இறக்க அனுமதிக்க வலியுறுத்தி, 2009ல் இருந்து போராடி வருகிறோம். ஆனால், அரசு கண்டுகொள்ளாததால், தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.எவ்வித தீங்கும் இல்லாத 'கள்' விற்பனையால், 'டாஸ்மாக்' வருவாய் பாதிக்கும் என்பதால், தி.மு.க., அரசு மவுனம் சாதித்த வருகிறது. இதை கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், போராட்டத்துக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம். இதே நிலை நீடித்தால், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தார்.
05-Feb-2025