உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காலத்துக்கு ஏற்ற சிறந்த முடிவு; பருத்தி வரி விலக்கிற்கு வரவேற்பு

காலத்துக்கு ஏற்ற சிறந்த முடிவு; பருத்தி வரி விலக்கிற்கு வரவேற்பு

பல்லடம்; காலத்துக்கு ஏற்ற சிறந்த முடிவு என, பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு அறிவிப்புக்கு, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது: இந்தியாவின் துணி நுால் உற்பத்தியின் முதுகெலும்பாக விளங்கும் ஜவுளி தொழில் மிகக் குறைந்த லாப விகிதத்திலேயே இயங்கி வருகிறது. பருத்தி விலை மாற்றங்களால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இச்சூழலில், அனைத்து வகையான பருத்தி இறக்குமதிகளுக்கு சுங்க வரி மற்றும் ஏ.ஐ.டி.சி., எனப்படும் செஸ் வரி ஆகியவற்றுக்கு விலக்கு அழைக்கும் வகையில், மத்திய அரசு எடுத்துள்ள முடிவு காலத்துக்கு ஏற்ற முடிவாக கருதுகிறோம். சர்வதேச அளவில் சவால்களை எதிர்கொண்டு வரும் ஜவுளி தொழிலுக்கு இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு, அமெரிக்கா, 25 சதவீதம் சுங்கவரி விதித்துள்ளதால், பருத்தி சார்ந்த ஜவுளி உற்பத்தி தொழில்கள் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளன. இந்த இக்கட்டான சூழலில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்கிறோம். இந்த வரி விலக்கு வாயிலாக, ஐரோப்பா, பிரிட்டன், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தைகளில், இந்திய ஏற்றுமதிகளை போட்டியிடக் கூடியதாக வைத்திருப்பதில் இது உதவியாக இருக்கும். மேலும், எம்.எஸ்.எம்.இ., சார்ந்த குறு மற்றும் சிறு தொழில் துறையினர் அதிக அளவில் பயன்பெறுவர். சரியான நேரத்தில் சரியான முடிவை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை