சவுக்கு மரங்கள் நட கைகோர்த்த கரங்கள்
திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், 2.70 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்துக்குள், மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடிக்க, பசுமைப்படை தீவிரமாக இயங்கி வருகிறது. குறிப்பாக, நான்கு ஆண்டுகளில் பயனளிக்கும், சவுக்கு மரக்கன்றுகள் நட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.அவிநாசி தாலுகா, சேவூர் அடுத்துள்ள சாலைப்பாளையத்தில், ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான வடக்கு தோட்டத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. திட்டக்குழுவினரும், நில உரிமையாளர் ஜெகநாதன் குடும்பத்தினரும், 6,000 சவுக்கு மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர்.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டக்குழுவினர், இலவசமாக மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, தெரிவித்துள்ளனர்.