திருப்பூர்; 'அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்களில், ஒரு மரத்துக்கு ஈடாக, 10 மரக்கன்று நட வேண்டும்' என, பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு, பசுமை ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக, விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மையத்தடுப்பில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை தன்னார்வ அமைப்பினரின் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் செல்லும் வாகனங்களின் பிரதான வழித்தடமாக அவிநாசி, அன்னுார், மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. தினமும், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் இச்சாலையில், அவிநாசி - மேட்டுப்பாளையம் இடைப்பட்ட, 38 கி.மீ., துார சாலை, 250 கோடி ரூபாய் செலவில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையோரமுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு, அன்னுார் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தை, பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கு பதிந்து, விசாரணை நடத்தியது.விளக்கமும், தீர்ப்பும்சாலை விரிவாக்கப்பணிக்காக, அவிநாசி - நரியம்பள்ளி சாலையில், 477 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. நரியம்பள்ளி முதல் மேட்டுப்பாளையம் வரை, 1,342 மரங்கள் வெட்டும் பணி துவங்கியுள்ளது. இதில், 550 மரங்களை வேரோடு பிடுங்கி, இடமாற்றம் செய்ய இருப்பதாக, நெடுஞ்சாலைத்துறை விளக்கம் அளித்துள்ளது.பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், 'சாலை விரிவாக்கம் என்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான முக்கியமான திட்டம். அதே நேரம், பசுமை, பல்லுயிர் பெருக்கம் பாதுகாக்க, சாலையோரம் மரக்கன்றுகளை நட வேண்டும். அந்த வகையில், வெட்டப்படும் ஒரு மரத்துக்கு ஈடாக, 10 மரக்கன்றுகள் நட வேண்டும்; நடப்படும் மரங்களை குறைந்தது, 5 ஆண்டுகள், அவை நன்கு வளரும் வரை நெடுஞ்சாலைத்துறை பராமரிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.பசுமை ஆர்வலர்கள் வரவேற்புதீர்ப்புக்கு பசுமை ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்று நட்டு பராமரிக்கும் பணியை செய்து வரும் அவிநாசி அறக்கட்டளையினர், கருவலுார் ரோட்டரி மற்றும் அவிநாசி வனம் பவுண்டேஷன் உதவியுடன், அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை, கருவலுார் பகுதியில், விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மையத்தடுப்பில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். --சாலையோர விரிவாக்கத்துக்காக, அவிநாசி - ஆட்டையம்பாளையம் பகுதியில் வெட்டப்பட்ட மரம்.அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப்பட உள்ளது. கருவலுாரில் மையத்தடுப்பில் 'களம்' அமைப்பு சார்பில், மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
நடுவது சுலபம் பராமரிப்பில் கவனம்
தீர்ப்பை அமல்படுத்துவது சிரமமான காரியம். மரக்கன்றுகளை நடுவது சுலபம்; ஆனால், அதை குறைந்தது, 2 ஆண்டுகளாவது பராமரிக்க வேண்டும். அப்போது தான் அது தழைத்து வளரும். அதற்கு, பிரத்யேக பணியாளர்கள் குழு இருக்க வேண்டும். ஏற்கனவே, நெடுஞ்சாலைத்துறையில் பணியாளர் பற்றாக்குறை உள்ள நிலையல் இப்பணியை அவர்களால் எந்தளவு மேற்கொள்ள முடியும் என்பது கேள்விக்குறி. எனவே, மரங்களை நட்டு வளர்க்கும் பொறுப்பை, தன்னார்வ அமைப்பினரிடம் வழங்கினால், பணி செவ்வனே நடைபெறும். சாலையோரம் மட்டுமின்றி, சாலையின் மையத்தில் மரக்கன்றுகளை நடுவது, 20 மற்றும், 30 ஆண்டுகள் பலன் தரும். - சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர்,'களம்' அறக்கட்டளை
நெடுஞ்சாலைத்துறையின் பொறுப்பு தீர்ப்பு, முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடப்படும் மரக்கன்றுகளை நல்ல முறையில் வளர்த்து காட்ட வேண்டியது, அவர்களின் பொறுப்பு. நெடுஞ்சாலையோரம் பசுமை பரப்பை வளர்க்க, பல தன்னார்வ அமைப்புகள் தயாராக உள்ளன.- சம்பத்குமார், தலைவர், அவிநாசி வனம் இந்தியா பவுண்டேஷன்
தன்னார்வ அமைப்புகள் தயார்
ரோடு விரிவாக்கத்துக்கு பின், அந்தந்த பகுதியில் உள்ள ரோட்டரி அமைப்பினர், அப்பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினரையும் ஒருங்கிணைத்து, மரக்கன்றுகளை நட்டு வளர்க்க நட்டு வளர்க்க தயாராக இருக்கின்றன. இதற்கு, நெடுஞ்சாலைத்துறையின் ஒத்துழைப்பு மிக அவசியம்.- வேலுசாமி, பட்டய தலைவர், கருவலுார் ரோட்டரி சங்கம்---