அவிநாசி தேரோட்டம்; பாதுகாப்பு சிறக்க ஆலோசனைகள்
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், தேர்த்திருவிழா, மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 8, 9,10 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. பாதுகாப்பான தேரோட்டம் குறித்து, போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., சிவகுமார் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., சிவகுமார் வழங்கிய அறிவுறுத்தல்கள்:* தேருக்கு சன்னை மற்றும் குடில் முட்டி வைப்போருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பாஸ் வழங்க வேண்டும்.* புதுப்பாளையம், ராயம்பாளையம் கிராமங்களை சேர்ந்த சன்னை; கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த குடில் முட்டி வைப்போர், பொறுப்பேற்று அவரவர் ஊர்களில் இருந்து வரும் நபர்கள் யாரும் மது அருந்திவிட்டு, சன்னை மற்றும் குடில் வைக்க கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.* நான்கு ரத வீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் உள்ள கழிப்பறைகள் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.* ரத வீதிகளிலும் உள்ள மண்டபம் வளாகத்திற்குள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். சரக்கு ஆட்டோ, டெம்போ போன்றவற்றில் வைத்து அன்னதானம் வழங்குபவர்கள் நான்கு ரத வீதிகளில் இருந்து, 50 மீட்டர் தள்ளி வைத்து வழங்க வேண்டும்.* கோவில் நிர்வாகம் சார்பில் மொபைல் டாய்லெட், தண்ணீர் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் குடிநீர் சப்ளை செய்ய லாரிகள் என ஏற்பாடு செய்து தர வேண்டும்.இவ்வாறு டி.எஸ்.பி., அறிவுறுத்தினார்.கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார், கவிதாமணி, புதுப்பாளையம் மற்றும் ராயம்பாளையம் சன்னை மிராசுகள், தேர் சக்கரம் திருப்புவோர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆகியோர் பங்கேற்றனர்.
போக்குவரத்து இடையூறு கூடாது
போலீசாரின் அறிவுறுத்தல்கள்:நான்கு ரத வீதிகளிலும் திருவிழா நாட்களில் டூவீலர், கார்கள் நிறுத்தாமல், பிளக்ஸ் பேனர்களை அகற்றி எந்த வகையிலும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் தேர் வலம் வர போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.சேவூரில் இருந்து வரும் வாகனங்கள், குலாலர் திருமண மண்டபம் பின் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். விழா நாட்களில் கோவை மெயின் ரோட்டில் பெருமாள் கோவில் அருகிலும், எதிரிலும் சிறுசிறு கடைகள் அமைக்கப்பட்டு பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அந்த கடைகள் அனைத்தும் நான்கு ரத வீதிகளை தவிர்த்து வேறு இடத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும்.திருவிழா கடைகளில் அதிக ஒளி எழுப்பும் பீப்பி, ஊது குழல் போன்ற விளையாட்டு பொருட்கள் விற்பதற்கு அனுமதிக்கக் கூடாது. அதனை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்.