உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தல்...அமோகம்!: தடை இருந்தும் கண்டு கொள்ளாமல் அதிகாரிகள் ஆசி

கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தல்...அமோகம்!: தடை இருந்தும் கண்டு கொள்ளாமல் அதிகாரிகள் ஆசி

'உடுமலை: தமிழகத்திலிருந்து, பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல, அரசு தடை விதித்துள்ள நிலையில், உடுமலையிலிருந்து, மூணாறு ரோடு வழியாக கேரளம் மாநிலத்திற்கு கனிமங்கள் கடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கனிம வளங்களை பாதுகாக்கும் வகையிலும், உள்ளூர் தேவையை நிறைவு செய்யும் வகையில், சாதாரண கற்கள், ஜல்லி, எம்- சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல, கடந்த ஜூலை, 27 முதல், மூன்று மாதங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி கொண்டு சென்றால், கடும் நடவடிக்கையும், மாநில எல்லையோர மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், உடுமலை - மூணாறு ரோட்டில், ஒன்பதாறு செக்போஸ்ட் வழியாக, கேரளாவுக்கு தடையை மீறி, அதிகளவு கனிமங்கள், அம்மாநில பதிவு எண் கொண்ட டிப்பர் லாரிகள் வாயிலாகவே கடத்தப்படுகிறது. பழநி, நெய்க்காரபட்டி பகுதியிலுள்ள கரடிக்கூட்டம், தாதநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், கேரளம் மாநிலத்தைச்சேர்ந்தவர்கள், குவாரிகளை குத்தகைக்கு எடுத்து, கனிமங்களை வெட்டி வருகின்றனர். அவர்களும், மடத்துக்குளம் பகுதியிலுள்ள ஒரு சில குவாரிகள், கிரசர் தொழிற்சாலைகளிலிருந்தும், அரசு தடையை மீறி, ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை, கொழுமம், குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, ஒன்பதாறு செக்போஸ்ட் மற்றும் உடுமலை - மூணாறு ரோடு வழியாக, கேரளா மாநிலம் மறையூர், மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அம்மாநில பதிவு எண் கொண்ட டிப்பர் லாரிகளிலேயே ஏற்றிச்செல்கின்றனர். அதிலும், லாரி முழுவதும் கனிமங்கள் ஏற்றிச் சென்றால், வெளிப்படையாக தெரியும் என்பதால், 10 டன் கொள்ளளவு கொண்ட டிப்பரில், ஒரு டன் வரை குறைவாக, பாடி மட்டத்திற்கும் கீழ் இருக்கும் வகையில் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு, தினமும், 30க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகிறது. ஒன்பதாறு போலீஸ் செக்போஸ்ட் மற்றும் மூணாறு ரோட்டில், ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரக சோதனை சாவடி மற்றும் சின்னாறு, உடுமலை வனச்சரக சோதனை சாவடி வழியாக 'மாமூல்' காரணமாக தடையின்றி, கனிமங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கண்காணிக்க வேண்டிய உடுமலை, அமராவதி நகர் போலீசார், வனத்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல், 'ஆசி' வழங்கி வருகின்றனர். இந்த ரோட்டிலுள்ள, போலீஸ், வனத்துறை செக்போஸ்ட்களையும் 'கவனித்து' விட்டு, தடையின்றி லாரிகள் செல்கின்றன. இதனால், தமிழக கனிம வளம் பிற மாநிலங்களுக்கு சட்ட விரோதமாக கடத்தப்படுவதோடு, அரசுக்கு கனிம வரி, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வரி இழப்பும் பெருமளவு ஏற்படுகிறது. எனவே, உயர் அதிகாரிகள், மூன்று சோதனை சாவடிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அனுமதித்த வனத்துறை, போலீசார் மீதும், கனிம வளக்கடத்தல் கும்பல், லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாநில எல்லையில் ஆய்வு மேற்கொள்ளாமல், அலட்சியமாக உள்ள, அரசுத்துறை அதிகாரிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ், அரசுத்துறைகளை ஒருங்கிணைந்து, நிரந்தரமாக மூணாறு ரோட்டில், கனிம வளத்துறை சோதனை சாவடி அமைக்க வேண்டும்.

முழு நேரமும் கண்காணிக்கப்படும்

திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் கனகராஜ் கூறுகையில்,'' மாநில எல்லையில், ஏற்கனவே ரோந்து பணிகள் நடந்து வருகிறது. இனி மேல், பகல், இரவு என முழு நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, கடத்தல் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ