உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறவைகள் வலசை அதிகரிக்க முயற்சி

பறவைகள் வலசை அதிகரிக்க முயற்சி

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம், 350 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது. இங்கு, 146 வகை உள்நாட்டு பறவைகள், 43 வகை வெளிநாட்டு பறவைகள் என, இதுவரை, 189 வரை பறவையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த, 2022ல், தமிழகத்தின், 17வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது; கடந்தாண்டு ஆக., மாதம், இக்குளத்துக்கு 'ராம்சர்' என்ற உலகளாவிய அங்கீகாரமும் வழங்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு, வலசை வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

வலசை குறைவு ஏன்?

''ஆண்டு முழுக்க குளத்தில் நீர் தேங்கியிருப்பதால், நீர்வாழ் தாவரங்கள் வளர்வதற்கான சூழல் அங்கு இல்லை. கரையோர பறவைகள் அமர்ந்து இளைபாறுவதற்கான மண் திட்டு, கரைகள், கருவேல மரங்கள் அங்கு போதிய அளவில் இல்லை குளம் முழுக்க நீர் நிரம்பியிருக்கிறது. இதனால், உயிர்ச்சூழல் மண்டலம் பாதித்து, பறவைகள் வந்து செல்வதற்கான சூழல் குறைந்திருக்கிறது'' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கருவேல மரங்கள் நடவு

கடந்த, 1970களில் குளத்தில் மரங்கள் நிறைந்திருந்த நிலையில், குளத்தில் தேங்கிய தொழிற்சாலை கழிவுநீரால் மரங்களின் வளர்ச்சி பாதித்தது. கடந்த, 1987ல் மரங்கள் வெட்டப்பட்டன; அதன்பிறகு, புதிதாக மரங்கள் எதுவும் அங்கு முளைக்கவில்லை; மரங்களை நட்டு வளர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், குளத்துக்கு அதிகளவு பறவைகளை வரவழைக்கும் முயற்சியாக, திருப்பூர் வனத்துறை சார்பில் குளக்கரையில் கருவேல மரங்கள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

சீமைக்கருவேல் அகற்றம்

வனத்துறையினர் கூறுகையில், 'நஞ்சராயன் குளத்தில் உள்ள மண் திட்டுகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களில் பறவைகளின் கூடுகள் அதிகளவில் உள்ளன. எனவே, குளக்கரையை சுற்றி கருவேல மரங்களை அதிகளவில் நடவு செய்து வருகிறோம். அதே நேரம், சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அகற்றுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ