முறைகேடான குடிநீர் இணைப்பு; ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ., முடிவு
அவிநாசி; திருமுருகன்பூண்டி பா.ஜ., நகர தலைவர், நகராட்சி கமிஷனரிடம் அளித்த மனு விவரம்:நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக ஏற்கனவே வரி விதிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மீண்டும் மறு அளவீடு செய்து வரி விதிக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்கள் கட்டட உரிமையாளர்களை மிரட்டும் வகையில் கூறி வருகின்றனர்.தமிழக அரசு தனிப்பட்ட முறையில் மறு அளவீடு செய்து வரி விதிப்பதற்கு அரசாணை எதுவும் வெளியிடாத நிலையில் அலுவலர்கள் பொதுமக்களிடம் கறார் வசூலில் ஈடுபட்டு வருவது ஏன் என்று தெரியவில்லை. 1வது வார்டுக்குட்பட்ட பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு என ஆறு குடிநீர் இணைப்பு பெற்றுக் கொண்டு முறைகேடாக வணிகரீதியாக குடிநீரை விற்பனை செய்து வருகின்றனர்.இதற்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் ஆதரவளித்து வருகின்றனர். எனவே, இப்பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி, பொதுமக்களை திரட்டி பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.