உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அமராவதி அணையில் படகு சவாரி முடக்கம்; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்

 அமராவதி அணையில் படகு சவாரி முடக்கம்; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்

உடுமலை: உடுமலை அமராவதி அணையில் இயங்கி வந்த படகு சவாரி முடங்கியுள்ளதால், சுற்றுலா பயணியர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடுமலை அமராவதி அணை, பூங்கா, வனத்துறையின் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து, ஆண்டுக்கு, 1.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையிலும், பொழுதுபோக்கு அம்சமாகவும் படகு சவாரி, 15 ஆண்டுக்கு முன் துவங்கப்பட்டது. இதனை, 12 மகளிரை உறுப்பினர்களாக கொண்ட வேலன் மகளிர் சுய உதவி குழு சார்பில் செயல்படுத்தினர். வார நாட்களில் குறைந்தளவு சுற்றுலா பயணியர் வரும் நிலையில், ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்கள், கோடை விடுமுறை காலங்களில் அதிகளவு சுற்றுலா பயணியர் படகு சவாரி மேற்கொண்டு, அமராவதி அணையின் அழகை ரசித்தனர். 15 ஆண்டுகளாக படகு சவாரி இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை, என காரணம் கூறி, சுற்றுலாத்துறை மற்றும் அதிகாரிகள் சார்பில் படகு சவாரி செயல்பட தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே, திருமூர்த்தி அணையில், மகளிர் சுய உதவி குழு சார்பில் இயக்கப்பட்ட படகு சவாரி, அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, 15 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்காத நிலையில், அமராவதி அணை சுற்றுலா மையத்தில் இயங்கி வந்த படகு சவாரியும் முடங்கியுள்ளதால், சுற்றுலா பயணியர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மகளிர் சுய உதவி குழுவினரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். மகளிர் சுய உதவி குழுவினர் கூறியதாவது: அமராவதி அணையில், 15 ஆண்டுகளாக எந்த சிறு விபத்தும் இல்லாமல், படகு சவாரி செயல்பட்டு வந்தது. படகு இயக்கப்படும் போது, நீர் வளத்துறைக்கு நாள் ஒன்றுக்கு, ரூ. 300 கட்டணம் செலுத்தப்பட்டது. சுற்றுலா பயணியரிடம், படகு சவாரிக்கு, ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கூடுதலாக ஒரு படகு, வாக்கி டாக்கி, தொலை நோக்கி, நிபந்தனை அறிவிப்பு பலகை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அது வரை இயக்க கூடாது, என நீர் வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இயங்க முடியாமல் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் அறிவுறுத்தியபடி, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த்குமாரிடம் கேட்ட போது, 'பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் படகு சவாரி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை