இலவச ஸ்கூட்டர் பயனாளி தேர்வு குழுவில் மாற்றம்
திருப்பூர்:இலவச ஸ்கூட்டருக்கு பயனாளிகளை தேர்வு செய்யும் மாவட்ட அளவிலான குழுவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனரகம் மாறுதல் செய்துள்ளது.கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை, தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. பயனாளிகள் தேர்வுக்கான மாவட்ட அளவிலான குழுவில், கலெக்டர் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், எலும்பு முறிவு மருத்துவர், ஆர்.டி.ஓ., ஆகியோர் இருந்தனர்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:உடல் பாதிப்பு 60 சதவீதத்துக்கு மேல் பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளே, இலவச ஸ்கூட்டருக்கு தகுதியானவர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, 40 சதவீத உடல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.அவர் மீண்டும் விண்ணப்பித்து குறுகிய நாட்களிலேயே, மருத்துவர்களிடம், 60 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்பு என அடையாள அட்டை வாங்கி, ஸ்கூட்டரும் பெற்று விட்டார். மாவட்ட தேர்வு குழு, நேர்காணலின்போது இதை கண்டறிந்து தடுக்க தவறிவிட்டது.இதன் தொடர்ச்சியாக, பயனாளிகள் தேர்வு செய்யும் மாவட்ட அளவிலான குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தேர்வு குழுவிலிருந்து எலும்புமுறிவு மருத்துவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, கலெக்டரால் நியமிக்கப்படும் அதிகாரி குழுவில் இடம்பெறுவார் என குறிப்பிட்டு, கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை, அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.