உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் தேவை! சிறு, குறு விவசாயிகள் தொடர் பாதிப்பு

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் தேவை! சிறு, குறு விவசாயிகள் தொடர் பாதிப்பு

உடுமலை ; தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், அனைத்து சிறு, குறு விவசாயிகளும் பயன்பெறும் வகையில், திட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என, அனைத்து பகுதி விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கிராமங்களில், விவசாயம் சார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.நீர்நிலைகளை துார்வாருதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளுடன், சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களிலும், வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.குறிப்பாக, விளை நிலங்களில் பாத்தி கட்டுதல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் பயன்பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்தாண்டு முதல் வேளாண் பணிகளில், வேலை உறுதி திட்டப்பணியாளர்களை நியமிப்பதில், அரசு புதிய நடைமுறையை செயல்படுத்தியது.விவசாயிகள், அவர்களின் விளைநிலம் இருக்கும் ஊராட்சியிலேயே குடியிருப்பவராக இருக்க வேண்டும். அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தால் மட்டுமே, வேலை உறுதி திட்டத்தில், பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.அவ்வாறு இல்லாத பட்சத்தில், வேலை உறுதி பணியாளர்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.உடுமலை சுற்றுப்பகுதியில் விவசாயமே பிரதானமாக உள்ளது. இங்குள்ள பல ஊராட்சிகளில், விவசாயிகளின் இருப்பிட பதிவு ஒருபக்கமும், அவர்களின் விளைநிலம் வேறு ஊராட்சிக்குட்பட்டதாகவும் இருக்கிறது.இதனால், தற்போது வேளாண் பணிகளுக்கு வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது. இந்த நடைமுறையால் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஊராட்சிகள் தரப்பிலும், வேலை உறுதி திட்டத்தில், கூடுதல் பணியாளர்கள் நியமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில், பணியாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் பாதிக்கின்றனர்.இப்பிரச்னையால், விவசாயிகள், வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் என இருதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

அரசு கவனிக்கணும்

ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது: இருப்பிடம் மற்றும் விளைநிலம் வேறு இடத்தில் இருந்தாலும், வேலை உறுதி திட்ட பணியாளர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கிராம சபை கூட்டம், குறை தீர் கூட்டங்களிலும் தொடர்ந்து மனு கொடுக்கின்றனர். அதை ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் அனுப்புகிறோம்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், விதிமுறை மாற்றத்தால், விவசாயம் சார்ந்த பணிகள், தொடர்ந்து பாதிக்கப்படுவது குறித்தும், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.அரசு விதிமுறைகளை மாற்றி அறிவித்தால், விவசாயிகள், தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் பயன்பெறுவார்கள். இவ்வாறு, தெரிவித்தனர்.தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன் பெறுவதற்கும் இத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், இருப்பிடம் எங்கிருந்தாலும், விவசாயிகள் தேவைப்படும் இடத்தில், பயிர்க்கடன் பெறலாம் என மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Senthilnathan
டிச 21, 2024 16:42

விவசாயம் எங்கு செய்தாலும் அருகாமையில் உள்ள அல்லது பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ள 100 நாள் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை