அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்பட போட்டி
உடுமலை: அரசுப்பள்ளிகளில், கல்வி இணை மற்றும் கல்வி சாரா மன்ற செயல்பாடுகளில், சிறார்களுக்கான திரைப்படங்கள் வெளியிடுவதற்கும், அது சார்ந்து சிறிய போட்டிகளும் நடக்கிறது.தற்போது சிறார் திரைப்படம் எடுப்பது தொடர்பான போட்டிகள் நடத்துவதற்கு, பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வித்துறை அறிவித்துள்ளது. அது குறித்த வழிமுறைகளையும் கல்விதுறை வழங்கியுள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, கதை வசனம் எழுதுவது, ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போட்டிகள், முதற்கட்டமாக பள்ளி அளவில் நாளை (7 ம் தேதி) முதல் 10ம் தேதி வரை நடக்கிறது.அதைத்தொடர்ந்து வட்டார அளவில் பிப்., 13,14 தேதிகளிலும், மாவட்ட அளவில் பிப்., 20ம் தேதியும் நடக்கிறது.அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:போட்டிகளை நடத்துவது, வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கான அடுத்தகட்ட போட்டிகள் குறித்து கல்வித்துறை வழிமுறைகளை வழங்கியுள்ளது.மேலும், கதை வசனம் பிரிவில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி, ஒளிப்பதிவு பிரிவில் இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளுடன் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு கூறினர்.