உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னை பராமரிப்பு; விவசாயிகள் மும்முரம்

தென்னை பராமரிப்பு; விவசாயிகள் மும்முரம்

பொங்கலுார்: இந்தாண்டு வரலாறு காணாத அளவு தேங்காய் விலை உயர்ந்துள்ளது. ஒரு காய், 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. தற்போது விலை சற்று குறைந்த போதிலும் இது விவசாயிகளுக்கு லாபகரமான விலை தான். கடந்த ஆறு மாதங்களாக போதிய மழை இல்லாமல் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டனர். கடும் வெப்பம் காரணமாக தென்னை மரங்கள் வாடி வதங்கியது. ஏராளமான விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை அமைத்தனர். ஆழ்குழாய் கிணற்று நீரும் வற்றிய தோப்புகளுக்கு தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னையை காப்பாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இது தென்னை விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தது போல் அமைந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை நீங்கி உள்ளதால் விவசாயிகள் தென்னை மரங்களுக்கு களை எடுத்தல், தொழு உரம் இடுதல், மரங்களை சுத்தம் செய்தல், உழவு ஓட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். தென்னை விவசாயிகள் சிலர் கூறுகையில், 'தென்னந்தோப்புகளில் பார்த்தீனிய விஷ செடி அதிக அளவில் முளைப்பது தான் பெரும் தொல்லையாக உள்ளது. இதனால், பலர் களைக்கொல்லி மருந்துகளை தெளிக்கின்றனர். ஆனால், இயற்கை மீதான ஆர்வம் தற்பொழுது அதிகரித்துள்ளது. இளம் தலைமுறை விவசாயிகள் தோப்புகளில் இந்த மழையை பயன்படுத்தி சணப்பை, கொள்ளு, தட்டை போன்றவற்றை பயிரிடுகின்றனர். அவை வளர்ந்த பின் மடக்கி உழுவதன் மூலம் உரச்செலவை முற்றிலும் குறைக்க முடி யும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை