தொடர்ந்து உயரும் கொப்பரை விலை; கிலோ ரூ.215.50க்கு விற்பனை
உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, காந்தி நகர் பொன்னேரி, கோட்ட மங்கலம், விளாமரத்துப்பட்டி, ராவணாபுரம், தளி, பூலாங்கிணர், காளியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 14 விவசாயிகள், 74 மூட்டை அளவுள்ள, 3,700 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 10 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.முதல் தரம், ரூ. 202 முதல், ரூ. 215.50 வரையும், இரண்டாம் தரம், ரூ. 170 முதல், 200 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது என, திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.