காட்சிப்பொருளாக எத்தலப்பர் அரங்கம் திருமூர்த்திமலையில் ஏமாற்றம்
உடுமலை,; திருமூர்த்திமலையில் காட்சிப்பொருளாக மாறியுள்ள எத்தலப்பர் அரங்கத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகே தளியை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்தவர் பாளையக்காரர் எத்தலப்பர். நாட்டின் சுதந்திர போராட்டத்துக்கான இவரது பங்களிப்பை போற்றும் வகையில், திருமூர்த்திமலையில் நினைவு அரங்கம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.ரூ. 2.60 கோடி மதிப்பீட்டில் உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில், எத்தலப்பர் திருவுருவ சிலையும், திருமூர்த்தி மலையில், 8,581 சதுர அடியில், நினைவு அரங்கமும் கட்டப்பட்டது.கடந்தாண்டு, செப்., மாதம், நினைவு அரங்கம், தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கம் தற்போது வரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.அரங்கம் மற்றும் இதர கட்டமைப்புகளும் பாதிக்கும் முன் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் கூறுகையில், ' திருமூர்த்திமலையில், மக்கள் குறைந்த வாடகையில், தங்கள் விசேஷங்களை இந்த அரங்கத்தில் நடத்தி கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வாடகை நிர்ணயம் செய்ய, பொதுப்பணித்துறை சார்பில், அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். வாடகை நிர்ணயம் செய்த பிறகு, அரங்கம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் விடப்படும்,' என்றனர்.