திருப்பூர்; திருப்பூரில் தெருநாய்த் தொல்லை அதிகரித்துள்ளது; கர்ப்பிணிகள் உள்பட ஐந்து பேரை தெருநாய் கடித்துக் குதறியது. மாவட்டத்தில் கால்நடைகளைக் கொல்வதும் தொடர்கதையாகியுள்ளது.திருப்பூரில் வீதி மற்றும் சாலை முழுக்க, நாய்களாக காட்சியளிக்கின்றன. கும்பலாகச் சுற்றுவதால், வாகனத்தில் செல்வோரும், நடந்துசெல்வோரும் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகளை நாய்கள் கடிப்பதால் பெற்றோர் அலறுகின்றனர்.ஐந்தாவது வார்டு, நெருப்பெரிச்சல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பெண் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த நாய் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வோரை துரத்தி அச்சுறுத்தி வந்துள்ளது. நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்ற, 2 கர்ப்பிணிகள் உட்பட ஐந்து பேரை துரத்தி கடித்துள்ளது. அப்பகுதியினர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அதிகாரியிடம் முறையிட்டனர். அதிகாரிகள் நாயை பிடிக்க இரண்டு முறை முயற்சி மேற்கொண்டனர். நாய் பிடிபடாமல் அங்கிருந்து தப்பியது. இருப்பினும், பொதுமக்களை அச்சுறுத்தும் நாயை பிடிக்க முயற்சி பணியாளர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.'நாய்களைப் பிடித்துச்செல்ல வேண்டும்' என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆடு, கோழிகளைகொல்லும் நாய்கள்மாவட்டம் முழுக்க தெரு நாய்களின் தாக்குதலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது தொடர்கிறது. நேற்று முன்தினம், மூலனுார் பட்டத்திபாளையத்தில், 27 ஆடுகள், நாய்க்கடிக்கு பலியாகின. அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் இறந்த ஆடுகளுடன், மூலனுார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார், உள்ளாட்சி நிர்வாகத்தினர், கால்நடைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விவசாயிகளிடம் பேச்சு நடத்தி, கலைந்து போகச் செய்தனர்.இதற்கிடையே, பல்லடம் அடுத்த மாதப்பூர் கிராமத்தில் உள்ள சில வெறி நாய்கள், ஆடுகளை வேட்டையாடி வருவதாக, விவசாயிகள் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:வருவாயை பெருக்கும் நோக்கில், விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு தொழிலையும் செய்து வருகிறோம். ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளிட்டவற்றை வளர்த்து வரும் நிலையில், இப்பகுதியில் சுற்றித் திறியும் வெறி நாய்கள், ஆடுகள், கோழிகளை விரட்டிக் கடித்து வேட்டையாடி வருகின்றன. கடந்த மூன்று மாதங்களில், 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் பத்துக்கும் அதிகமான கோழிகளை, வெறி நாய்கள் வேட்டையாடி கொன்றுள்ளன.வெறி நாய்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.----
கால்நடைகளுக்கு 2 நாளில் இழப்பீடு?
'தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் கால்நடைகளுக்கு, இரண்டு நாட்களில் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.'இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தாராபுரம் தாசில்தார், விவசாய அமைப்பினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'இறந்து போன ஆடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக, முன்மொழிவுகள் அனுப்பி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, இழப்பீடு வழங்கும் அரசாணையை, இரு நாட்களுக்குள் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.'அரசாணை வெளியிடப்படும் நிலையில், இது, ஒட்டுமொத்த மாநிலமும் பயன்பெறும்; திருப்பூரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக வெளியிடப்படும் அரசாணை, ஒட்டு மொத்த தமிழக விவசாயிகளுக்கு பலன் அளிக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு' என, விவசாய அமைப்பினர் தெரிவித்தனர்.---