முருங்கைக்காய் கிலோ, 2 ரூபாய்க்கு விற்பனை
பொங்கலுார்; ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பருவ மழை தீவிரமடைந்ததால் முருங்கை பூக்கள் மொத்தமாக உதிர்ந்தது. இதனால், விளைச்சல் இல்லை. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து குறைந்தளவு காய்கள் சந்தைக்கு வந்தது. இதனால், விலை உச்சத்தை தொட்டது.ஒரு கிலோ முருங்கைக்காய், 200 ரூபாய்க்கு விலை போனது. பங்குனி மாதம் துவங்கியதும் முருங்கை சீசன் களை கட்டத் துவங்கியது. தற்பொழுது நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது.அறுவடை செய்த முருங்கையை விவசாயிகள் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஒரு கிலோ முருங்கைக்காய் குறைந்தபட்சம் இரண்டு ரூபாய்க்கு விலை போகிறது. இது பறிப்பு கூலிக்கு கூட கட்டும் படி ஆகவில்லை.விலை சரியும் போதெல்லாம் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிப்பதால் நஷ்டத்தில் இருந்து முருங்கை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைப்பது வாடிக்கையாக உள்ளது.தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினரும் முருங்கை பவுடர் தொழிற்சாலையை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுக்கின்றனர்.தேர்தல் முடிந்தபின் யாரும் அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை. விலை சரிந்து விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.