| ADDED : செப் 06, 2026 07:11 PM
திருப்பூர், செப். 7– தமிழகத்தில் சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழுக்கான நுாற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதால், கட்டுமானப் பணிகள் முடங்கி, முதலீட்டாளர்களும் பாதிக்கப்படுவதாக கட்டுமான சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவில் அமையும் தொழில்முறை கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் கட்டாயம். ‘டிடிசிபி’ மூலம் திட்ட அனுமதி பெறும்போது இந்த சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதற்கும் சென்னையில் உள்ள ஒரே அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கப்படுவதால், ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கி கிடக்கின்றன. அனுமதி பெற 9 முதல் 18 மாதங்கள் வரை ஆகிறது. மேலும், ஏற்கனவே கட்டடங்கள் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் கூடுதல் கட்டுமானத்துக்கு அனுமதி கோரும்போது, அங்கு ஏற்கனவே கட்டுமானம் இருப்பதை காரணம் காட்டி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் தொழில் முனைவோர் புகார் தெரிவிக்கின்றனர். இழுத்தடிப்பால் சலிப்பு ––––––––––––––– இந்திய கட்டுனர் சங்க திருப்பூர் மைய முன்னாள் தலைவர் சுந்தர்ராஜ் கூறியதாவது: ‘டிடிசிபி’ திட்ட அனுமதி 30 நாட்களில் கிடைக்கும் நிலையில், சுற்றுச்சூழல் சான்றிதழுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனால் வங்கிக் கடன், இயந்திரங்கள் நிறுவுதல், தொழிற்சாலை துவக்கம் மற்றும் வேலைவாய்ப்புகள் தாமதமாகின்றன. முதலில் ‘டிடிசிபி’ மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டட திட்ட அனுமதி வழங்கி, பின்னர் சுற்றுச்சூழல் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும். சான்றிதழை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பின்னலாடை, நுாற்பாலை போன்ற ‘வெள்ளை’, ‘பச்சை’ வகை தொழில்களுக்கு இந்த நிபந்தனையில் விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். அரசுக்கு வருவாய் இழப்பு ‘சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறுவதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, பலர் தங்கள் கட்டுமானப் பரப்பளவை, 20,000 சதுர மீட்டருக்கு குறைவாகக் கணக்குக் காண்பித்து, கட்டட அனுமதி பெற்றுக் கொள்கின்றனர். உண்மையான பரப்பளவைக் காட்டாததால், அரசுக்குச் சேர வேண்டிய கட்டண வருவாய் பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது. அத்தகைய கட்டுமானங்களின் போது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயல்பாடுகள் ஏதேனும் இருந்தாலும், அதைக் கண்டறிய முடியாத நிலை உருவாகிறது’ என்கின்றனர் கட்டுனர்கள்.