உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினம் தினம் திகில் இரவு; கொலைக்கு அஞ்சாத மாபாதகர்கள்; துாக்கம் தொலைத்த விவசாயிகள்

தினம் தினம் திகில் இரவு; கொலைக்கு அஞ்சாத மாபாதகர்கள்; துாக்கம் தொலைத்த விவசாயிகள்

கும்மிருட்டு கவ்வ, வீட்டு முற்றத்தின் வெட்ட வெளியில், நிலா வெளிச்சத்தில் பாய் மர கட்டில் விரித்து, உறங்கும் விவசாயி தான், தன் தோட்டத்தில் விளைந்து கொண்டிருக்கும் பயிருக்கும், பட்டி கட்டி அதில் வளர்த்து கொண்டிருக்கும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கும் காவல்காரர்களாக இருந்து வருகின்றனர்; இளம் வயதினர் மட்டுமின்றி, முதியவர்கள் கூட இப்படி தான் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.ஆனால், இன்று இத்தகைய சூழல் இல்லை என்பது தான் விவசாயிகளின் ஆதங்கம். அதுவும், ஒதுக்குப்புற கிராமங்களில் உள்ள தோட்டத்து வீடுகளில் கொலை, கொள்ளை சம்பவம் தொடரும் நிலையில், இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே விவசாயிகள் அஞ்சுகின்றனர். 'இதனால், தங்களின் பயிர் மற்றும் கால்நடைகளை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்பது அவர்களின் ஆதங்கம்.சமீப ஆண்டுகளாக திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தோட்டத்து வீடுகளில் வசிக்கும் வயதான தம்பதியரை 'குறி' வைத்து தாக்கி, கொலை செய்து, நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து செல்கின்றனர், மர்ம நபர்கள். குற்றவாளிகளை பிடிப்பது என்பது, போலீசாருக்கு மிகப்பெரும் சவாலாக மாறியிருக்கிறது.விவசாயிகள் சிலர் கூறியதாவது:முந்தைய காலங்களில் தோட்டத்து வீடுகளில் வசிப்போர், பயிர்களை கண்காணிக்கவும், தங்கள் விவசாய நிலங்களில் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கண்காணிக்கவும் இரவு நேரங்களில், வெளியில் கட்டில் விரித்து நிம்மதியாக உறங்குவர்; சிறிய சத்தம் வந்தால் கூட, உஷாராகி விடுவர். ஆனால், தற்போது அத்தகைய நிலையில்லை. இரவில், வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே பயப்பட வேண்டி இருக்கிறது.திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல இடங்களில், தோட்டத்து வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை, தெரு நாய்கள் கடித்து கொல்கின்றன. ஒரு ஆண்டாக இது, தொடர்கிறது. அதனை தடுக்க கூட விவசாயிகளால் வெளியில் வர முடியாத நிலையுள்ளது. அந்தளவுக்கு, மரண பயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அந்தந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் இரவு ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இரவு நேரங்களில், வெளியில் கட்டில் விரித்து நிம்மதியாக உறங்குவர். சிறிய சத்தம் வந்தால் கூட, உஷாராகி விடுவர். ஆனால், தற்போது அத்தகைய நிலையில்லை. இரவில், வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே பயப்பட வேண்டி இருக்கிறது

முதியவர்கள் தன்னந்தனியே

கொள்ளையருக்கு சாதகம்போலீசார் கூறியதாவது:பெரும்பாலான இடங்களில் ஒதுக்குப்புறமான கிராமங்களில் உள்ள தோட்டத்து வீடுகளில் வயதான தம்பதிகளே வசிக்கின்றனர்; அவர்களது பிள்ளைகள், நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். இது, கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. மிக எளிதாக, வீடு புகுந்து கொலை, கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தி விட்டு சென்று விடுகின்றனர். எனவே, வயதான பெற்றோரை, தோட்டத்து வீடுகளில் தனியாக குடியமர்த்துவதில் கவனம் தேவை.குடும்ப, சொத்து பிரச்னை கூட, கொலை, கொள்ளை நிகழும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு, இயன்ற வரை சுமூக தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தங்கள் உறவினர்களாலோ, வெளியாட்களாலோ தங்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக போலீசாரின் கவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். தோட்டத்து வீடுகளில் கட்டாயம் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும். திருப்பூரில் உள்ள ஊரக பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், ஏற்கனவே போலீஸ் பற்றாக்குறையாக உள்ளதால், இரவு ரோந்துப்பணிக்கு போதிய போலீசார் இல்லை என்பதே யதார்த்தம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி