பொங்கலுார்:பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீருக்குப் பதிலாக குப்பை வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, ஆக., 18ல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு நாளாக பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் பயணித்த தண்ணீர் நேற்று காங்கயம் அருகே 'ஜீரோ பாயின்ட்' - ஐ சென்றடைந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின் வாய்க்காலில் தண்ணீர் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். வாய்க்காலில் தண்ணீரை விட குப்பைகளே அதிக அளவில் வந்ததை பார்த்து, விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். வாய்க்காலில் தண்ணீர் செல்வதை குப்பைகள் தடுத்ததால், 'ஜீரோ பாயின்ட்'-ல் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை. ஒரு கி.மீ., நீளத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அந்தக் குப்பைகளில் காலி மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், டையாபர்கள் கோழிக்கழிவுகள் நிறைந்திருந்தது. விவசாயிகள் இரண்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு குப்பைகளை மணிக்கணக்கில் அகற்றினர். அதன்பின்னரே, தண்ணீர் காங்கயம் வாய்க்காலில் சென்றது. தண்ணீர் தங்கள் பகுதி வாய்க்காலுக்கு வந்ததை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
வாய்க்காலில் குப்பை எப்படி?
பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் பொங்கலுார், வாவிபாளையம், ஆண்டிபாளையம் உட்பட பகுதிகளில் குப்பைகள் வாய்க்காலில் கொட்டப்படுகின்றன. ஊராட்சி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்தால் குப்பை கொட்டுவதை தவிர்க்க முடியும்.ஆனால், ஓட்டு போய்விடும் என்பதால் ஊராட்சிகள் கண்டு கொள்வதில்லை. பி.ஏ.பி.,வாய்க்கால் திறந்த வெளி 'பாராக' மாறிவிட்டது. அதனை கட்டுப்படுத்த போலீசாரோ, வருவாய் துறையினரோ நடவடிக்கை எடுப்பதில்லை. மது பிரியர்கள் மூலம் குப்பை, காலி மது பாட்டில்கள் ஏராளமான அளவில் வீசப்படுகின்றன. சுல்தான்பேட்டை பகுதிகளில் கோழிக்கழிவுகள் மலை போல் குவிக்கப்படுகின்றன. இதுவே, நீரோட்டத்தை தடுக்கிறது.