அறநிலையத்துறைக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பல்லடம்:அறநிலையத்துறையை கண்டித்து, கரைப்புதுார் பகுதி இனாம் நில விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.அறநிலையத்துறை மூலம், நிலங்கள் பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, பல்லடம் அடுத்த கரைப்புதுார் ஊராட்சி, அல்லாளபுரம் கிராமத்தில், பாதிக்கப்பட்ட இனாம் நில விவசாயிகள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருக சாமி கூறியதாவது:பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சியில், ஏற்கனவே பட்டா வழங்கப்பட்ட மற்றும் பட்டா பெறாமல் விடுபட்ட நிலங்கள் மீது, பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது. இதன்படி, கரைப்புதுார் கிராமத்தில் மட்டும், 650 ஏக்கர் நிலங்கள் பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது, கலெக்டர் மற்றும் போலீசில் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பதிவுத்துறைக்கு வழங்கப்பட்ட கடிதத்தை அறநிலையதுறை திரும்பப் பெறாவிட்டால், மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, அறநிலையத்துறை மூலம், நிலங்கள் பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, அல்லாளபுரம் பகுதியில், நுாற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தியடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். --- 4 காலம் கரைப்புதுார் ஊராட்சி, அல்லாளபுரம் கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள். சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் அரசியலமைப்பு சட்ட வழிகாட்டுதலின்படி, அனைத்து மாநிலங்களும் இனாம் ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்து, அந்தந்த விவசாயிகள், பொதுமக்களுக்கு பட்டா வழங்கின. தமிழகத்திலும் அதேபோல் இனாம் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு உரிய விசாரணைக்கு பின் பட்டா வழங்கப்பட்டது. இதில், போதிய படிப்பறிவு இன்றி, பட்டா பெறாமல் விடுபட்டவர்களும் ஏராளமாக உள்ளனர். அவ்வாறு விடுபட்டவர்களுக்கும், பல்வேறு மாநிலங்களில், மீண்டும் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும், 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் மீது அறநிலையத்துறையும், வக்பு வாரியமும் உரிமை கொண்டாடி வருகின்றன. மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்திலும் உரிய சட்டத்தை அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். - ஈசன் முருகசாமி, நிறுவனர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.