அதிக கனிமவளம் சுரண்டிய குவாரிகளுக்கு அபராதம்
திருப்பூர், ஜூன் 12-திருப்பூர் மாவட்டத்தில், கனிமவளங்களை அளவுக்கு அதிகமாக சுரண்டிய, இரண்டு குவாரிகளுக்கு, மொத்தம் ரூ.63 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தமிழக குவாரிகளிலிருந்து சுரண்டப்படும் கனிமவளங்கள், கேரளா போன்ற அருகாமை மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தொடர்கிறது. விவசாய அமைப்பினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், குவாரிகளின் கனிமவள சுரண்டலுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.தமிழகத்திலுள்ள குவாரிகளில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். அனுமதித்ததைவிட அதிகளவு கனிமவளங்களை வெட்டி எடுத்த குவாரி உரிமையாளர்களுக்கு, அபராதம் விதித்தும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் 115 கல் குவாரிகள்திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், தாராபுரம், மடத்துக்குளம், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில், 115 கல்குவாரிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு குவாரிக்கும் எவ்வளவு கனிமவளங்கள் வெட்டி எடுக்கவேண்டும் என, வரையறுக்கப்பட்டுள்ளது. சில குவாரிகள், கனிமளைத்துறை அனுமதித்ததைவிட, அதிக அளவு கனிமவளங்களை சுரண்டிவிடுகின்றன. அந்தவகையில், மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட ட்ரோன் சர்வேயில், நான்கு குவாரிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவு கனிமவள சுரண்டல் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது.
8 குவாரிகளில் ட்ரோன் சர்வே நிறைவு
திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக, இதுவரை எட்டு குவாரிகளில் ட்ரோன் சர்வே முடிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நடத்திய ஆய்வில், மடத்துக்குளத்தில் இரண்டு குவாரிகளில், அதிகளவு கனிமவளங்கள் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு குவாரிக்கு 30 லட்சம் ரூபாயும், மற்றொரு குவாரிக்கு, 33 லட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டமாக நடத்திய ஆய்வில், மடத்துக்குளத்தில் ஒரு குவாரி; காங்கயத்தில் ஒரு குவாரியில், கூடுதல் கனிமவளங்கள் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இவ்விரு குவாரிகளுக்கும் அபராதம் நிர்ணயிக்க, வருவாய் கோட்டாட்சியர்களுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. மற்ற குவாரிகளிலும், ட்ரோன் சர்வே நடத்தப்பட்டு வருகிறது.- கனிம வளத்துறை அதிகாரிகள்