வெளிமாநில தொழிலாளர் விவரம் ஆன்லைனில் பதிவு செய்யணும்
திருப்பூர்: தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வெளிமாநில தொழிலாளர் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குனர் வேலுமணி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்ரி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறுவகை தொழிற்சாலைகள், கடைகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து, மருத்துவமனை, விவசாயம் சார்ந்த தொழில், கோழிப்பண்ணை, செங்கல் சூளை, கட்டுமான பணிகளில் வெளிமாநில தொழிலாளர் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். தொழில்முனைவோர், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை, https://labour.tn.gov.in/ism என்ற தளத்தில் உடனடியாக பதிவு செய்யவேண்டும்.