கானக காவலனுக்கே சோதனை
சென்னையில் பறவைக்காய்ச்சலால் காகங்கள் கொத்துகொத்தாக மடிந்தன. கோழிப்பண்ணை உள்ளிட்ட பறவைகள் அதிகம் இருக்கும் இடங்களில் ஆய்வு செய்து, அங்கு சுகாதாரத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தி வருகின்றனர். 'கழிவுகள் சூழ்ந்த இடங்களில் செத்துக்கிடக்கும் புழு, பூச்சி, சிறு உயிரினங்களை உண்டு, செரிக்கும் ஆற்றல் படைத்தவை காகங்கள். இதனால், இவை 'கானகத்தின் காவலன்' எனவும் அழைக்கப்படுகின்றன. விஷத்தன்மை நிறைந்த அத்தகைய உணவுகளை உண்டு செறிக்கும் ஆற்றல் நிறைந்த காக்கைகளே, பறவைக்காய்ச்சலுக்கு பலியாகின்றன என்றால், எந்தளவு மனித கூட்டம் சுதாரித்திருக்க வேண்டும்?'' என கேள்வி எழுப்புகிறார் சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம். அவர் நம்முடன் பகிர்ந்தவை: பறவைக்காய்ச்சல் பரவக் காரணம், 'எச்.5 என்.1 மற்றும் எச்.7 எச்.9' என்ற கிருமி தொற்றுதான் காரணம் என, மருத்துவம் கூறுகிறது. வளர்ப்பு கோழிகளுக்கு, நோய் எதிர்பாற்றல் இயற்கையாகவே குறைவு; நோய் தொற்று எளிதில் அவற்றை தாக்கும். பறவைக்காய்ச்சலால் காகம் மட்டுமின்றி, மயில், புறா போன்றவையும் கூட இறக்கின்றன. இதற்கெல்லாம் மேலாக, 10 ஆயிரம் கி.மீ.க்கு அப்பால் இருந்து, வலசை வரும் வெளிநாட்டு பறவைகள் கூட, பறவைக்காய்ச்சலுக்கு பலியாகின்றன, என்ற செய்தி தான் பெரும் துயரம். பறவைக்காய்ச்சல் பாதிப்பு என்பது, காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, உடல் சோர்வு உள்ளிட்ட பல உபாதைகளை ஏற்படுத்துகிறது.இறந்து கிடக்கும் காகம், மயில், புறா போன்றவற்றை கையில் தொடக்கூடாது; அவற்றை, 5 அடிக்கும் ஆழமாக குழி தோண்டி புதைக்க வேண்டும்; அல்லது, எரியூட்ட வேண்டும். மாறாக, திறந்தநிலையில் அவை கிடந்தால், பூனை, நாய் உள்ளிட்டவை அவற்றை உண்ணக்கூடும்; இதனால், அவற்றுக்கும் பறவைக்காய்ச்சல் தொற்றிக்கொள்ளும்: இது, மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார். --- காகங்கள் படம் மற்றும் கோவை சதாசிவம் படம் காகங்கள் ஏன் வேண்டும்? வனப்பகுதி மட்டுமின்றி, குப்பைக்கழிவுகள் குவிந்து கிடக்கும் பகுதிகளில் குவியும் காக்கை கூட்டம், அங்குள்ள உணவுக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், சிறு பூச்சியினங்களை உண்டு, அந்த இடத்தை சுத்தமாக்குகிறது. மேலும், பல்வேறு மரங்களின் காய், கனி, விதைகளை உண்பதன் வாயிலாக, மண்ணில் விழும் அவற்றின் எச்சத்தில் இருந்து மரம், செடி, கொடிகள் முளைத்து, பசுமைப்பரப்பு விரிவடைகிறது. எனவே, காகங்கள் இயற்கையின் பன்முகத்தன்மையை சமன்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. - கோவை சதாசிவம், சுற்றுச்சூழல் எழுத்தாளர்.