நொய்யல் நீர் எப்படி? லைவ் கண்காணிப்பு
திருப்பூர்:கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கலக்கும் சாக்கடை கழிவுநீரால், நொய்யலாறு மாசடைந்துள்ளது. பனியன் உற்பத்தி நகரான திருப்பூரில், சில முறைகேடு சாய ஆலைகள், சுத்திகரிக்காத, சாயக்கழிவுநீரை நொய்யலாற்றில் திறந்துவிட்டு, மேலும் மாசுபடுத்துகின்றன.இதனால் மாசுகட்டுப்பாடு வாரியம், ரியல் டைம் மானிட்டரிங் தொழில்நுட்பத்தில், நொய்யலாற்று நீரின் தன்மையை முழு நேரமும் ஆய்வு செய்து, உடனுக்குடன் அளவீடுகளை வழங்கும் கருவியை ஆற்றில் பொருத்தி, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:நொய்யலாற்றில் மூன்று கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி, ஆற்று நீரை உறிஞ்சி, நீரின் டி.டி.எஸ்., அளவு, அமில, காரத்தன்மைகள், ஆக்சிஜன் அளவு, மின் கடத்தும் திறன், கலந்துள்ள உயிரியல் மாசு அளவு உட்பட எட்டு வகையான தன்மையை, முழு நேரமும் அளவீடு செய்து, அறிக்கை அனுப்பும்.தொடர் கண்காணிப்பு வாயிலாக, நொய்யலாற்றில் எந்த இடத்தில் சாயக்கழிவுநீர் போன்ற நச்சுகள் கலக்கின்றன என கண்டறிந்து துரித நடவடிக்கைகள் எடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.