சுடுகாடு இடத்தை அளக்க உண்ணாவிரத போராட்டம்
அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுார் ஊராட்சி, சந்தைப்பேட்டை அருகே 55 சென்ட் அளவில் பொது சுடுகாடு ஒன்று உள்ளது.சுடுகாட்டை ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதால், பொதுமக்கள், சடலங்களை தற்போது ரோட்டோரத்தில் புதைத்து வருகின்றனர்.சுடுகாடு இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டி ஊராட்சி சார்பில், அவிநாசி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர். நடவடிக்கை இல்லை.அளவீடு செய்து தர காலதாமதம் ஏற்படுத்தும் அவிநாசி தாசில்தார் சந்திரசேகரை கண்டித்தும், சுடுகாடு இடத்தை உடனடியாக அளவீடு செய்து கொடுக்க கோரியும் ஊராட்சி தலைவர் சாந்தாமணி, துணை தலைவர் வேலுசாமி, ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் நேற்று ஊராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த தாசில்தார் சந்திரசேகர், ஊராட்சி தலைவரை தொடர்பு கொண்டு வரும் வியாழக்கிழமைக்குள் அளவீடு செய்து கொடுப்பதாக உறுதி கூறி உள்ளார். தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.