உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்; குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்ப்பு

அங்கன்வாடிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்; குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்ப்பு

உடுமலை; அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிகள் குறைவாக இருப்பதாக பெற்றோர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். சமூக நலத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. உடுமலையில் 138, குடிமங்கலத்தில் 58, மடத்துக்குளத்தில் 75 மையங்களும் உள்ளன. அங்கன்வாடி மையங்களில், இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். அங்கன்வாடி மையங்களில், முன்பருவ கல்வி வழங்குவதும் திட்டத்தில் உள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டு தளவாடங்கள், வண்ண பென்சில்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஆனால் ஒரு சில மையங்களில் மட்டுமே, குழந்தைகள் பொருட்களை வைத்து விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பெரும்பான்மையான மையங்களில், அவர்கள் ஏதும் செய்யாமல் அமர வைக்கப்படுகின்றனர். குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது: சில மையங்களில் ஆர்வமாக குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளை கற்றுத்தருகின்றனர். பாடல்களை பாடுவது, சிறு சிறு பயிற்சிகள் அளிக்கின்றனர். மையங்களில் உள்ள பந்துகளை விளையாட வழங்குகின்றனர். ஆனால் ஒரு சில மையங்களில், குழந்தைகள் பராமரிப்பது மட்டுமே நடக்கிறது. குழந்தைகளுக்கு பொழுதுபோக்காக மட்டுமின்றி, அவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையிலும், பயிற்சி வழங்கும் வகையிலும் அங்கன்வாடிகள் இருக்க வேண்டும். குழந்தைகள் ஆர்வமுடன் மையங்களுக்கு செல்லும் வகையில் மாற வேண்டும். சமூக நலத்துறையினர் இதுகுறித்து ஆய்வு நடத்தி, அனைத்து மையத்திலும் குழந்தைகளுக்கு விளையாட்டு தளவாடங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கும் கூடுதல் பொருட்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !