உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுப்பது அவசியம்

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுப்பது அவசியம்

உடுமலை; தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்காததால், நெரிசலும், விபத்துகளும் அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தாராபுரம் மாநில நெடுஞ்சாலை பிரிகிறது. உடுமலை நகரப்பகுதியில், 2 கி.மீ., க்கும் அதிகமான தொலைவு இந்த ரோடு அமைந்துள்ளது. மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படும் இந்த ரோட்டில், தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளால், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், நகர எல்லை வரை, மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இருபுறங்களிலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால், மையத்தடுப்புக்கும், ஆக்கிரமிப்புக்கும் இடையிலான குறுகலான இடத்தில், அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில், நெரிசல் அதிகரித்து, விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக, ராஜகாளியம்மன் கோவில் அருகே, வாசவி நகர் ரோடு சந்திப்பு பகுதியில், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் ரோட்டை கடக்க முடியாத அளவுக்கு, நெரிசல் தொடர்கதையாக உள்ளது. நகர எல்லை வரை, இதே பிரச்னை காணப்படுகிறது. ரோட்டின் இருபுறங்களிலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற, பல முறை வலியுறுத்தியும், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. மாநில நெடுஞ் சாலையில், அதிகரித்துள்ள விபத்துகளை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !