உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் வேகமெடுக்கும்  

பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் வேகமெடுக்கும்  

திருப்பூர்: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முடிந்து, இன்று முதல் பனியன் நிறுவனங்களும், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும் வழக்கமான இயக்கத்துக்கு திரும்புகின்றன. திருப்பூரில் 1,500க்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவனங்கள், 2,500க்கும் அதிகமான உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், 350 சாய ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்கள், நுாற்றுக்கும் அதிகமான தனியார் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாய ஆலைகள், 300க்கும் அதிகமான பிரின்டிங் நிறுவனங்கள்; நுாற்றுக்கும் அதிகமான கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங் நிறுவனங்கள், காம்பாக்டிங், ரைசிங், எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் என, ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இயங்குகின்றன. மொத்தம், எட்டு லட்சம் தொழிலாளர், நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்காக, திருப்பூரில் இயங்கும் நிறுவனங்களுக்கு, 18ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வாயிலாக, 23ம் தேதி முதல் பனியன் நிறுவனங்கள், 30 சதவீதம் அளவுக்கு இயங்க துவங்கின. சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த வெளிமாவட்ட தொழிலாளர் குடும்பங்கள், முழுமையாக திருப்பூர் திரும்பிவிட்டன. இன்று முதல், வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப உள்ளனர். இதனால், திருப்பூர் மீண்டும் வழக்கமான பரபரப்புக்கு மாறிவிடும். அனைத்து வணிக வளாகங்கள், கடைகளும் இன்று முதல் முழு இயக்கத்துக்கு வர உள்ளன. குளிர்கால ஆடை உற்பத்தியில் கவனம் ஏற்றுமதி நிறுவனங்களில், குளிர்கால ஆடை ஆர்டர் உற்பத்தி வேகமாக நடந்து வருகிறது. இருப்பு இல்லாமல் விற்பனையாகிவிட்டதால், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களும் ஆடை உற்பத்தியை துவக்குவர். 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும் மீண்டும் பரபரப்பான இயக்கத்துக்கு தயாராகிவிட்டனர். - பின்னலாடை தொழில்துறையினர். பீஹார் தொழிலாளர் திரும்ப தாமதமாகும் திருப்பூரில் உள்ள பீஹார் தொழிலாளர், 'சாத்' பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றுள்ளனர்; இன்றும், நாளையும், சாத்பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவ., 6 மற்றும் 11ம் தேதிகளில் பீஹார் சட்டசபை தேர்தல் நடக்கிறது. நவ. 14ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது; தேர்தல் கொண்டாட்டம் முடிந்த பிறகே, பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளதாக, நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !