பஸ் வசதி செய்து கொடுங்க கிருஷ்ணா நகரில் எதிர்பார்ப்பு
திருப்பூர் : 'எட்டு மாதமாக வலியுறுத்தியும் பஸ் வசதிக்கான ஏற்பாடு செய்யவில்லை. விடுமுறை முடிந்து பள்ளி திறக்க போகின்றனர். இனியாவது மாணவ, மாணவிகள் சிரமத்தை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்,' என, கிருஷ்ணாநகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.பெருமாநல்லுார் அடுத்துள்ளது பொங்குபாளையம், கிருஷ்ணா நகர், அம்மன்நகர், எஸ்.பி.கே., நகர், சக்தி கார்டன். இங்கிருந்து அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளி, பெருமாநல்லுார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தினசரி நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர்.கிருஷ்ணா நகரில் இருந்து மேற்கண்ட பகுதிக்கு பஸ் இல்லாததால், ஆட்டோ, டூவீலர்களில் லிப்ட் கேட்டு வர வேண்டிய நிலை உள்ளது.இது குறித்து, கிருஷ்ணாநகர் மக்கள் கூறியதாவது:கடந்தாண்டு ஆக., மற்றும் டிச., மாதம் இருமுறை கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்துள்ளோம். தற்போது வரை பஸ் இயக்கம் குறித்து முடிவெடுக்கவில்லை. பள்ளிக்கு செல்ல ஏதுவாக காலை 8:00 மணி மாலை 4:30 மணிக்கு பஸ் இயக்க வேண்டும்.தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முன்பை விட கூடுதல் மாணவ, மாணவியர் கிருஷ்ணாநகரில் இருந்து பெருமாநல்லுார், அய்யம்பாளையம் சென்று வர வேண்டும். எங்களின் சிரமங்களை புரிந்து கொண்டு பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.