குமரன் நினைவகம் மேம்பாடு பணிகள் இன்று துவங்குகின்றன
திருப்பூர்: திருப்பூர் குமரன் நினைவகத்தில், அலங்கார வளைவு உட்பட, 38.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் இன்று துவங்குகின்றன. தியாகி திருப்பூர் குமரன் நினைவகம், ரயில்வே ஸ்டேஷன் அருகே அமைக்கப்பட்டுள்ளது. நினைவு ஸ்துாபி, குமரன் சிலை, குமரன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படக்காட்சி அறை, படிப்பகம் ஆகியவற்றுடன் நினைவகம் அமைந்துள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் பராமரிக்கப்படும் நினைவகத்தில், 38.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மேம்பாட்டு பணிகளை செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நினைவகத்தின் முன்வாசலில், அலங்கார வளைவு பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது. அதற்காக, பழைய இரும்பு வளைவுகள் மற்றும் மின்விளக்குகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. இதுகுறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் குமரன் நினைவகம், அவ்வப்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. நினைவகத்தில், அலங்கார வளைவு, குடிநீர் வசதி மற்றும் பராமரிப்பு பணிகள், 38.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்க உள்ளது,' என்றனர்.