அவிநாசி அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோபிக் ஆபரேஷன்
அவிநாசி : அவிநாசி அரசு மருத்துவமனையில், லேப்ராஸ்கோபிக் ஆபரேஷன் வாயிலாக, சிறுவனுக்கு ஒட்டுக்குடல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஒன்றியம், கக்குச்சி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு கடும் வயிற்று வலி இருந்தது. அவிநாசியில் வசித்து வந்த பெற்றோர், சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றன். அல்ட்ரா சவுண்ட் முறையில் டாக்டர் அருண் (லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்) சிறுவனை பரிசோதித்ததில், அவருக்கு ஒட்டுக்குடல் பிரச்னை இருந்தது தெரிய வந்தது.டாக்டர்கள் அருண், பாலாஜி, செந்தில் (மயக்கவியல்) மற்றும் அவிநாசி அரசு மருத்துவமனை செவிலியர்கள் அன்புக்கரசி, பொன் சித்ரா கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அதில் வெற்றிகரமாக லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் தழும்புகள் இல்லாத முறையில், சிறுவனின் ஒட்டுக்குடல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அவிநாசி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடத்திய மருத்துவ குழுவினரை முதன்மை மருத்துவ அலுவலர் கண்ணன் மகாராஜ் வாழ்த்தினார்.