தென்னந்தோப்பில் அடுக்கு முறை சாகுபடி; ஊடுபயிரால் நன்மை ஏராளம்
உடுமலை; 'தென்னந்தோப்புகளில் அடுக்கு முறையில், ஊடுபயிர் சாகுபடி செய்வதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும்,' என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இத்தென்னந்தோப்புகளில் ஊடுபயிர் சாகுபடி செய்வதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.அத்துறையினர் கூறியதாவது:தென்னந்தோப்புகளில், மரங்களுக்கு இடையில் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி, பல்வேறு தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்யலாம்.தென்னை மரத்தின் மேல்பகுதியிலிருந்து, மண் பகுதி வரையுள்ள இடைவெளியில், பல்வேறு உயரங்கள் கொண்ட, பயிர்வகைகளை தேர்வு செய்து நடலாம்.முதல் அடுக்கில், அதிக உயரம் வளரக்கூடிய, மரங்களையும், இரண்டாவது அடுக்காக, தென்னை மரத்தை சார்ந்து, 12 முதல் 15 அடி உயரம் வரை ஓலைகளை ஊடுருவி, சூரிய ஒளியை அறுவடை செய்ய உதவும், குருமிளகு பயிரிடலாம்.மூன்றாம் அடுக்காக தென்னையின் இடையே உள்ள மண் பகுதியில், ஆணி வேர்கள் செலுத்தி, குறைந்த உயரத்தில், 3 முதல் 4 அடி உயரம் மட்டும் வளரும் கோகோ பயிரை தேர்வு செய்யலாம்.மேலும், அதே உயரத்தில் வளரும் அகத்தி, கறிவேப்பிலை, மரவள்ளி ஆகிய பயிர்களையும் நடவு செய்யலாம்.நான்காவது அடுக்காக, நிழலில் மிகக்குறைந்த வெளிச்சத்தில் வளரும், அன்னாசிப்பழம், இதர புல்கரணைகள், கம்பு, கனகாம்பரம், இஞ்சி, சேனை, சம்பங்கி மலர், மல்லிகை ஆகிய சாகுபடிகளையும், நடவு செய்யலாம்.மண் வளத்தை பாதுகாக்கும், வெட்டிவேர், கொழுக்கட்டைப்புல், கொத்து அவரை, கொத்தமல்லி, ஆகியவற்றையும் கலந்து பயிரிடலாம்.இத்தகைய அடுக்கு முறை சாகுபடியால், கூடுதல் வருவாய் கிடைக்கும். இத்தகைய ஊடுபயிர்களை பயிரிடும் போது, தென்னை பாதிக்கப்படாமல் இருக்க, மண் வளம் அறிந்து உரமிட வேண்டும்.இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.