சேவூர்: சேவூரிலுள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நாளை துவங்குகிறது. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில், கி.பி.12-ம் நுாற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பு காணப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க வைணவ தலமாக விளங்கும் அழகு ராய விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் வரும் 30ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா காலை, 7:45 மணிக்கு மேல் 8:45 மணிக்குள் கோலாகலமாக நடைபெறுகிறது. கும்பாபிேஷக விழா, இன்று காலை ஸ்ரீ விஸ்வக்ஸேனர் ஆராதனம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், விமான கலசம் வைத்தல், கொடிமரம் வைத்தல், நாளை வாஸ்து ஹோமம், ம்ருத்சங்கிரஹனம், ரக் ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம் ஆகியவற்றுடன் துவங்குகிறது. நாளை, காலை ஸ்ரீ வாலீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்து யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. வரும், 29ம் தேதி கோ பூஜை, மூலவருக்கு ஸ்தாபன திருமஞ்சனம், மகாலட்சுமி, சர்வ காயத்ரி ஆகிய ஹோமங்கள், வேதபாராயணம், மூலவர், கருடாழ்வார் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகசாலை வேள்விகள் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. வரும் 30ம் தேதி அதிகாலை நாடி சந்தனம், புண்யாகவாசனம், மகா பூர்ணாகுதி ஆகியவை நான்காம் கால யாக பூஜைகளில் நடைபெற்று யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவையுடன் காலை 7:45 மணிக்கு விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து 8:25 மணிக்கு மூலஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக தினத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை திருக்கல்யாண உற்சவம் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்காக கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.