மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் துவக்கம்
20-Jan-2025
திருப்பூர்; அரண்மனைபுதுார் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், ஒன்றிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நேற்றுமுன்தினம் துவங்கி நடைபெற்றுவருகிறது. முதல்நாளில், தாராபுரத்தில் நடைபெற்ற முகாமில், மாற்றுத்திறனாளிகள் 26 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.இரண்டாவது நாளான நேற்று, திருப்பூர் அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முகாம் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முகாமை பார்வையிட்டார். கண், காது மூக்கு தொண்டை, எலும்புமுறிவு, நரம்பியல், மனநலம், குழந்தைகள் நல மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மூன்றாவது நாளான இன்று, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; நாளை, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி; வரும் 25 ம் தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடை பெறுகிறது.
20-Jan-2025