உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாற்றாண்டு கொண்டாட்டம்; தயாராகிறது கே.எஸ்.சி., பள்ளி

நுாற்றாண்டு கொண்டாட்டம்; தயாராகிறது கே.எஸ்.சி., பள்ளி

கடந்த, 1918ல்,க.சுப்ரமணிய செட்டியார் தானமாக வழங்கிய இடத்தில், திருப்பூரில், கே.எஸ்.சி., அரசுப்பள்ளி (மொத்தம் 7.7 ஏக்கர் இடம்) உருவானது; நுாற்றாண்டு கடந்தும் அவரது பெயரில் மேல்நிலைப்பள்ளியாக இன்றளவும் நிலைத்திருக்கிறது.தமிழக முன்னாள் கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கம் செட்டியாரின் தந்தைதான் சுப்பிரமணிய செட்டியார்.

கம்பீர கட்டடம்

பள்ளி நுழைவு வாயிலில், நுாற்றாண்டு கடந்த கட்டடம் கம்பீரமாககாட்சி தருகிறது. பலமுறை பள்ளி புனரமைப்பு செய்யப்பட்ட போதும், பழமையுடன் இக்கட்டடம் அப்படியே திகழ்கிறது.முதல், 25 முதல், 35 ஆண்டுகள் பள்ளி மாணவர் எண்ணிக்கை 500 முதல், 600க்கும் குறைவாகவே இருந்துள்ளது. மாணவர் எண்ணிக்கை, ஆயிரம் எண்ணிக்கையை கடந்ததும், ஒவ்வொரு வகுப்பறையும், தளங்களும் 1960களுக்கு பின் கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளியில் படித்தவர்களில், குறிப்பிடத்தக்க, உயர் பணியில் உள்ள திருப்பூரைச் சேர்ந்த பலர் உள்ளனர்.

பள்ளியால்உயர்ந்தவர்கள்

மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஏற்றுமதியாளர் சங்க நிறுவனர் சக்திவேல்,எம்.பி., சுப்பராயன் உள்ளிட்டோர் இப்பள்ளியில் தான் படித்துள்ளனர். பள்ளி துவங்கி, 107 ஆண்டுகளானாலும், 1970க்கு பின் தான் முன்னாள் மாணவர் கூட்டங்கள் நடந்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குழுவினர் அவர்களால் ஆன உதவிகளை பள்ளிக்கு செய்து கொடுத்துள்ளனர்.

அதிக மாணவர் குழுக்கள்

இன்றும் அதிகளவில் முன்னாள் மாணவர் குழுக்களை கொண்ட பள்ளியாக கே.எஸ்.சி., பள்ளி தான். தற்போது 1,500க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் அதிகளவு மாணவர் படிக்கும் பள்ளி என்பதால், அதற்கேற்ப ஆய்வகம், கணிணி அறை, வகுப்பறை வசதி செய்து தர, மைதானம் தவிர்த்து அனைத்து இடங்களிலும், வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

கூடுதல் வகுப்பறை தேவை

தற்போது, ஆறு முதல், ஒன்பது வரை ஒவ்வொரு வகுப்பிலும், ஏ முதல் 'எச்' வரை வகுப்புகள் உள்ளது. பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் தொடர்ந்து, 30 ஆண்டுகளாகஅதிகளவு மாணவர்கள் தேர்வெழுத செய்ய வைக்கும் ஒரே பள்ளியாக இது திகழ்கிறது. தற்போது, பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம், கூடுதல் டெஸ்க், பெஞ்ச் தேவை உள்ளது.வரும் 16ம் தேதி பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. நுாற்றாண்டு விழாவிலும், அதன் பின்பும் இதுகுறித்து ஆலோசித்து, தற்போது தளங்களுக்கு மேல் கூடுதல் வகுப்பறை கட்டுவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

புருேஷாத்தமன், 78, கணித ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்:

இப்பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 1 வரை படித்தேன்; தற்போது எம்.பி.,யாக உள்ள சுப்பராயன்; என் வகுப்பு தோழர். 1969 முதல், 1995 வரை, 35 ஆண்டுகள், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கு கணித ஆசிரியராக பணியாற்றினேன்; தலைமை ஆசிரியராக அகண்ட நாராயணன் பத்து ஆண்டு பணியாற்றினார். நினைவுகூரும் போது மகிழ்ச்சியாக உள்ளது. உதவி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றேன். இப்பள்ளியில், கால் நுாற்றாண்டுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றியதை, நுாற்றாண்டு விழா நடப்பதைப் பெருமையாக கருதுகிறேன்.ஈஸ்வரன், 80, அறிவியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்: எங்கள் பள்ளிக்கு நுாற்றாண்டு விழா நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. எத்தனையோ சிரமங்களை கடந்து அன்று மாணவர்களை பள்ளிக்கு வர வைக்க வேண்டி இருக்கும். இன்று பள்ளியில் இடமில்லை வேறு பள்ளிக்கு சென்று விடுங்கள் என கூறும் அளவுக்கு பள்ளி வளர்ந்துள்ளதற்கு, பல கட்டங்களில் பல தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் உழைப்பு உள்ளது. 1968ல் இருந்து 1986 வரை பணியாற்றினேன். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக இருந்தேன். எங்கள் பள்ளியில் படித்தவர்கள் அருமையான மாணவர்கள்; பணியாற்றிய பள்ளியில் நுாற்றாண்டு நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சியான தருணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !