திருப்பூர் : ஓய்வு பெற்ற அரசு அரசு ஊழியர்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கருவூலத்துறை இணை இயக்குனர் சுப்புலட்சுமி, மாவட்ட கருவூல அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர், ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.ஓய்வூதியர்கள் சிலர் கூறியதாவது:தமிழக அரசின் ஓய்வூதியம் பெறுவோருக்கான காப்பீடு திட்டம், வரும் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இத்திட்டத்தில், ஓய்வூதியதாரர்களிடம், மாதம், 350 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், செலவு தொகையை திரும்பப்பெற நீண்ட நாட்கள் காத்திருக்க நேரிடுகிறது. எனவே, புதிய காப்பீட்டு திட்டத்தில், கருவூலத்திலேயே செலவு தொகை பெற ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும், அரசு சிகிச்சையும் பெற, திருத்தம் செய்ய வேண்டும்.80 வயதானோர்
குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் வயது, 80 வயதுக்கு மேல் இருந்தால், கூடுதல் பென்சன் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சார்நிலை கருவூல அளவில், கூடுதல் சலுகை பெறும் பயனாளிகள் பட்டியலை வழங்கினால், அவர்களுக்கு உதவி செய்ய முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.விண்ணப்பிக்கலாம்!
கருவூலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'குடும்ப ஓய்வூதியம் பெறும் பயனாளிக்கு, 80 வயதுக்கு மேலாகியிருந்தால், கூடுதல் சலுகை கிடைக்கும். எனவே, 'பான்' கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களுக்கு, 80 வயதுக்கு மேலாகிவிட்டதாக விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தால், பரிசீலனை செய்து கூடுதல் சலுகை பெற்றுத்தரப்படும்,' என்றனர்.