இன்பத்திலும், துன்பத்திலும் கடவுளை மறக்கக்கூடாது
பல்லடம்; பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், குரு பெயர்ச்சி விழா நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது.விநாயகர் வேள்வி, சரஸ்வதி, மகாலட்சுமி மற்றும் துர்கா பூஜையை தொடர்ந்து, முதல் கால வேள்வி வழிபாடு துவங்கியது. நேற்று காலை,இரண்டாம் கால வேள்வி, 1,008 தீர்த்த கலச அபிஷேகம் ஆகியவை நடந்தன. மதியம் குருபகவான் திருவீதி உலா நடந்தது.விழாவை துவக்கி வைத்து கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது:வார்த்தை தவறினால் வாழ்க்கையே மாறிவிடும். இன்பம் வரும் போது கடவுளை மறந்து சந்தோஷப்படுகிறோம். துன்பம் வரும்போது மட்டும் கடவுளை அழைக்கிறோம். இன்பம் - துன்பம் இரண்டிலும் கடவுளை மறக்கக்கூடாது.பக்திக்கு என்றுமே சக்தி உண்டு. முன்னோர்கள் மனதிலேயே கோவில் கட்டி இறைவனை வழிபட்டனர். நாம், மனதில் கோவில் கட்டாவிட்டாலும், கட்டி வைக்கப்பட்டுள்ள கோவிலுக்காவது சென்று இறைவனை வழிபடுங்கள். இறைவனை மகிழ்ந்து, நெகிழ்ந்து வழிபட்டால், கொடியவனும் அடியவனாகலாம். மழை, வெயில் அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்னைதான். இருப்பினும், அனைத்து இன்னல்களைக் கடந்து எப்படி வாழ வேண்டும் என்பதை கடவுள்தான் தீர்மானிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.