மரங்கள் கணக்கெடுப்பு அறிவிப்புக்கு வரவேற்பு
தமிழகத்தில், 23 சதவீதமாக உள்ள பசுமைப்பரப்பை, 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கில், 'பசுமை தமிழகம்' திட்டத்தை அரசு அறிவித்து, மரக்கன்றுகளை நட்டு வளர்க்க ஊக்குவிப்பு வழங்கி வருகிறது. வனப்பகுதி மட்டுமின்றி, தனியார் நிலங்கள், நெடுஞ்சாலையோரம், அரசு அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலியிடங்கள் என, அனைத்து இடங்களிலும் மரக்கன்று நட்டு வளர்க்க ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், சேலம் ஆகிய ஆறு நகரங்களில், மரங்கள் கணக்கெடுப்பு பணி, ஓரிரு மாதங்களில் துவங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாதந்தோறும், கலெக்டர் தலைமையில், பசுமை கமிட்டி கூட்டம் நடக்கிறது. இதில், ஒவ்வொரு அரசு துறையினர் சார்பில், அவர்கள் சார்ந்த அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை, புதிதாக நடப்பட்டுள்ள மரக்கன்றுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தன்னார்வ அமைப்பினர் சார்பில் நடப்படும் மரக்கன்றுகள் குறித்த விவரமும் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அறிவியல்பூர்வ ஆய்வு அவசியம்
---------------------------வெயில் தகிக்கும் திருப்பூரில் பசுமை போர்வையை உருவாக்க வனத்துறை உட்பட பல்வேறு தன்னார்வ அமைப்பினர் சார்பில் மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது. தனியார் விவசாய நிலங்கள் மட்டுமின்றி, சாலையோரம், பொது இடங்களிலும் மரக்கன்று நடப்படுகிறது. அவ்வகையில், பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. திருப்பூரில் எந்தளவு பசுமை பரப்பு அதிகரித்துள்ளது; அதனால் நீர் வளம், மண் வளம் எந்தளவு பாதுகாக்கப்பட்டுள்ளது; வெப்பம் குறைந்துள்ளதா, உயர்ந்துள்ளதா என்பது போன்ற விவரங்களை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்