உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாணவர்களுக்கு தேர்வெழுத ஸ்கிரைப்கள் தயார் ஆலோசனை வழங்கல்

 மாணவர்களுக்கு தேர்வெழுத ஸ்கிரைப்கள் தயார் ஆலோசனை வழங்கல்

- நமது நிருபர் -: திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி உள்பட உடல் நலன் பாதித்த மாணவர்களுக்கு உதவுவதற்காக, சொல்வதை எழுதுபவராக (ஸ்கிரைப்) ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தயார்நிலையில் உள்ளனர். இவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பார்வையற்றோர் உள்பட மாற்றுத்திறனாளி, கை காயம் அடைந்தோர், நரம்பியல் பாதித்த மாணவர்களுக்கு, அவர்கள் சொல்வதை கேட்டு விடைத்தாளில் எழுதும், சொல்வதை எழுதுபவர் (ஸ்கிரைப்) நியமிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், வரும் மார்ச் 2; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதியும் துவங்குகின்றன. இந்தாண்டு பொதுத்தேர்வுகளில் ஆசிரியர்களுக்கு பதிலாக, ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவியர், சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்கப்படுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 93 மையங்களில் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வை, மாணவ, மாணவியர் 26 ஆயிரத்து 461 பேர் எழுதுகின்றனர்; 104 மையங்களில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 29 ஆயிரத்து 44 பேர் எழுதுகின்றனர். மாவட்டத்தில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் உள்பட, உடல் பாதிப்பு காரணமாக சுயமாக தேர்வு எழுத முடியாதவர்களுக்காக, சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவியர் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தயார்நிலையில் உள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, தேர்வு எழுதுவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, கடந்த 9ம் தேதி 73 பேருக்கும்; பின்னர் 54 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமில், ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவ, மாணவியர் 54 பேர் பங்கேற்றனர். ஆலோசனைகள்  திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, சரவணக்குமார் ஆகியோர், மாணவர்களுக்கு தேர்வெழுத உதவும் 'ஸ்கிரைப்'களுக்கு கூறிய ஆலோசனைகள்:  'ஸ்கிரைப்'கள் தேர்வு நேரத்துக்கு ஒருமணி நேரம் முன்னரே, மையத்துக்கு சென்றுவிட வேண்டும். மாணவருடன் கலந்துரையாடி, அவர்களது பயத்தை போக்கவேண்டும்.  நேர்மையை கடைபிடிக்கவேண்டும். சேவை மனப்பான்மையோடு, எழுத வேண்டும்.  மாணவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே, விடைத்தாளில் எழுதவேண்டும். ஒருவேளை மாணவர், தவறாக விடையளிக்கும்பட்சத்தில், அப்படியே தவறாகத்தான் எழுதவேண்டும்; எக்காரணம்கொண்டும், சுயமாக விடையளித்தல் கூடாது.  மாணவர் கூறும் வரிசை அடிப்படையிலேயே, கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும்.  தேர்வில் மாணவர் கூறிய விடை தொடர்பான விஷயங்களை, வெளிநபர்களிட ம் பகிரக்கூடாது.உதவியாளர் தேவைப்படும் மாணவர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் இருவரும் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்; தேவையான மருந்துகளை, தேர்வு மையத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ