அவிநாசி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் காத்திருப்பு அறை
அவிநாசி : அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலை செய்து கொள்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றது.அந்த சமயத்தில், நோயாளிகளுடன் வரும் உறவினர்களும், இறந்தவர்களின் உடலை வாங்க வரும் உறவினர்களும் பல மணி நேரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெட்ட வெளியில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.இதனையறிந்த நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர், ஜே.ஏ.எம்., அண்ட் கோ ஜூவல்லரி நிறுவனத்தின் நிதி உதவியுடன், 2.5 லட்சம் மதிப்பில், காத்திருப்பு அறை கட்டித்தர முன் வந்தனர். தற்போது காத்திருப்பு அறை கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ''நோயாளிகளுடன் வருபவர்கள் பிரேத பரிசோதனை நேரத்தில், உடல்களை வாங்க வருபவர் என அமர இருக்கை, மின்விசிறி, குடிநீர் சுத்திகரிப்பு மெஷின் ஆகியன பொருத்தப்பட உள்ளது. இவை, விரைவில் செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.